Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

சென்னையில் அமைதியாக முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்: ஒரே நாளில் 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதியாக நடந்து முடிந்தன. ஒரே நாளில் 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

கடந்த 29ம் தேதி கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் 5 ஆயிரத் துக்கும் அதிகமான சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

36 அடி உயர விநாயகர் சிலை

இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், தி.நகர் முத்துசாமி பாலம், புளியந்தோப்பு பேருந்து நிலையம் அருகில் என 4 இடங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.

திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்து புறப்பட்ட 36 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தொடங்கி வைத்தார். மற்ற இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அயனாவரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

1256 பெரிய சிலைகள்

இரவு 7 மணி வரை பட்டினப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, காசிமேடு, எண்ணூர் கடற்கரைகளில் 1256 பெரிய சிலைகள் உட்பட சுமார் 5 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

47 மீட்டர் உயர ராட்சத கிரேன்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கடற்கரைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஊர்வலங்கள் வீடியோ எடுக்கப்பட்டன. பட்டினப்பாக்கத்தில் 100 டன் எடையை தூக்கும் 47 மீட்டர் உயர ராட்சத கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டு சிலை கள் அதன் மூலம் தூக்கப்பட்டு கடலுக்குள் கரைக்கப்பட்டன. எடை குறைவான சிலைகளை பக்தர்களே கடலுக்குள் எடுத்து சென்றனர்.

போர் நினைவு சின்னம் அருகே உள்ள முத்துசாமி பாலத்தில் விநாயகர் சிலை கொண்டுவரப்பட்ட மினி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். சிலையும் உடைந்தது.

விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் திருவல்லிக் கேணியில் திடீரென கைத்தடி ஊர்வலம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். ‘சிறுசிறு பிரச்னைகளை தவிர சென்னை மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்ததாக' போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x