வருமான வரி வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு

வருமான வரி வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு
Updated on
1 min read

வருமான வரி வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1-ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் கூடுதல் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1991-92 மற்றும் 1992-93-ம் நிதியாண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கு, சென்னை எழும்பூர் கூடுதல் பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகிய இருவரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

“வருமான வரி சட்டத்தின்படி, சமரச மனு தாக்கல் செய்து பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. அதன்படி இந்த வழக்கில் நான் சமரச மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த மனு மீது 180 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். எனது மனு மீது வருமான வரித் துறையினர் முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது.

அக்டோபர் 1-ம் தேதி நான் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என்று ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in