Published : 10 Sep 2014 09:05 AM
Last Updated : 10 Sep 2014 09:05 AM

மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கில் கண் விழித்தார்

அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெண், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கண் திறந்தது பார்த்ததால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம் பாடி ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஜபருல்லா(55). இவரது மனைவி சேனாஷ்(49). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு, வாணியம் பாடி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட சேனாஷ், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 7-ம் தேதி அவர் உயிரிழந்ததாக பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சேனாஷ் உடல் வாணியம்பாடிக்குக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் திங்கள்கிழமை மாலை இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அவரது வீட்டில் நடந்தது. சேனாஷ் உடல் மீது உறவினர்கள் தண்ணீரை ஊற்றியபோது, அவரது கண்கள் அசைந்து லேசாக திறந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வாணியம் பாடியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரை அழைத்து வந்தனர். பரிசோதித்த மருத்துவர், சேனாஷ் கோமா நிலையில் இருப்பதாகவும், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்றும், சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சேனாஷ் உயிரிழந்தார்.

அதன்பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்தது.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் இறந்ததாக உறுதிசெய்யப்பட்ட பெண், அடுத்த நாள் கண் விழித்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x