Published : 23 May 2019 02:24 PM
Last Updated : 23 May 2019 02:24 PM
அகில இந்திய அளவில் பாஜக பெரிய அளவிலான வெற்றி பெற்றாலும் தமிழக பாஜக தலைவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. தமிழகத்தில் மத்திய அமைச்சருக்கான பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நோக்கிச் செல்கிறது.
அனைத்து தொகுதிகளிலும் நட்சத்திர வேட்பாளர்களே போட்டியிட்டனர். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் எச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டனர்.
இவர்களில் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் கண்டிப்பாக வெல்வார். அவர் மத்திய அமைச்சராவார் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டார். பொன். ராதாகிருஷ்ணனும் மீண்டும் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தில் கட்டாயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக அனைவரும் பின்தங்கியுள்ளனர். அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் இனி வெல்வது சாத்தியமில்லை.
தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் யார் வென்றாலும் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயம் என்கிற நிலையில் ஒருவரும் வெல்லாதது பெருத்த ஏமாற்றமே. அகில இந்திய அளவில் இமாலய வெற்றியை பெற்ற போதிலும் அதைக் கொண்டாடக்கூடிய மனநிலையில் இல்லாத நிலை தமிழக பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT