Published : 30 Apr 2019 08:47 PM
Last Updated : 30 Apr 2019 08:47 PM

திமுக எச்சரிக்கையை மீறி 3 டிடிவி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டிஸ்: சட்டப்பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்

3 டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவைத்தலைவர் நோட்டீஸ் அனுப்பினால் சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவோம் என எச்சரித்த திமுக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

அதிமுகவில் உள்ள ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுப்பதாக இருந்தது. அப்படி நடந்தால் அது நடுநிலை தவறியச் செயல் அவ்வாறு செய்தால் சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவருவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

ஆனால் இன்று விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத்தலைவர் தனபால் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் திமுக சட்டப்பேரவைத்தலைவர் தனபால்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

 “நம்பிக்கையில்லா தீர்மானத்தினை” முன்மொழிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலருக்கு எழுதிய கடிதத்தை தி.மு.க. எம்.எல்.ஏ, கு.க.செல்வம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சட்டமன்றப் பேரவை செயலரை நேரில் சந்தித்து அளித்தனர்.

கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:

  “பொருள்:      இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 179 (சி) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள், விதி 68-ன் கீழ்  பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் கடந்த 24/08/2017 அன்று, அ.தி.மு.க-வின் கொறடா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் 18/09/2017 அன்றே அவசர கதியில் 18 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்தார். இந்நடவடிக்கை பேரவைத் தலைவரின் நடுவு நிலை குறித்து பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.

இந்நிலையில், 20/03/2017 அன்று சில உறுப்பினர்கள் 11 சட்டமன்ற உறுப்பினர்கள்மீது பதவி நீக்க நடவடிக்கை எடுத்திட மனு அளிக்கப்பட்டும்கூட, இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் பேரவைத் தலைவர் அவர்கள் எடுக்கவில்லை.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது தாங்கள் அறிந்ததே. இந்நடவடிக்கையின்மையும், பேரவைத் தலைவரின் நடுவு நிலை குறித்து பல விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.

தற்போது 26/04/2019 அன்று அ.தி.மு.க.வின் கொறடா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் 30/04/2019 அன்று 3 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்திட சட்டமன்றப் பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.

22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் 23/05/2019 அன்று வரவுள்ள நிலையில் சட்டமன்றத்தின் பெரும்பான்மையினை மாற்றியமைக்கும் விதத்தில் இவ்வாறான முடிவுகளை சட்டமன்றப் பேரவைத் தலைவர் எடுப்பது,  தமிழக சட்டமன்ற மாண்பிற்கு கேடாய் விளைந்திடும் என்றும் மக்களாட்சியில் ஒரு சட்டமன்றப் பேரவைத் தலைவர், இவ்வாறு நடந்திட்டால் அது அவர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று உணர்த்துகிறது.

எனவே, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை முன்மொழிகிறேன்

தீர்மான  வடிவு:

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் மீது இந்த அவைக்கு நம்பிக்கையில்லை

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன் நகல்  சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனபாலுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x