Published : 27 Apr 2019 01:57 PM
Last Updated : 27 Apr 2019 01:57 PM
வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. நாளை தீவிரப் புயலாக மாறி வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை பெற்றிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வடதமிழக கடற்கரையிலிருந்து சுமார் 1150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ . வேகத்தில் நகர்ந்துள்ளது. இது இன்று மாலைக்குள் புயலாக வலுப்பெற்று நாளை தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் ஏப்.30-ம் தேதி வட தமிழகம் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.
மழையைப் பொறுத்தவரையில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரும் 30-ம் தேதி மற்றும் மே.1 தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் இன்றும் நாளையும்தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், வரும் 29, 30 மற்றும் மே.1 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழகடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படும்''.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT