Published : 23 Apr 2019 09:29 PM
Last Updated : 23 Apr 2019 09:29 PM

கஞ்சா, ஆயுதங்களை கண்டுபிடித்ததால் ஆத்திரம்: மதுரை சிறையில் கலவரம் செய்த கைதிகள்

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்ற அதனால் கோபமடைந்த கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தலைமையில் போலீஸார் சிறைக்கைதிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சில கைதிகள் அறையில் கஞ்சா மற்றும் சில ஆயுதங்கள் சிக்கின. இதையடுத்து அவர்களை விசாரணைக்கு வார்டன்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் வார்டர்களுடன் ஒத்துழைக்காமல் அவர்கள் வம்பிழுத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையில் அப்பள ராஜா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கைதிகள் சிறைக்குள் இருந்து கற்களை சாலையில் வீசினார்கள் சிறைச் சுவர் மீது ஏறி சாலையில் கற்களை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீஸார் வரவழைக்கப்பட்டு சாலையில் செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

பின்னர் சிறைத்துறை மேலதிகாரிகள் வந்து கைதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கைதிகள் அமைதி அடைந்தனர். சிறையின் சூழ்நிலை அமைதியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x