Published : 15 Apr 2019 01:50 PM
Last Updated : 15 Apr 2019 01:50 PM
அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறிவருகிறார்கள் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "முன்பாகவே, அதிமுகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்று மோடியின் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.
நீட் தேர்வு முறையைக் கைவிட வலியுறுத்தப்படும் என்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் நீட் தேர்வு தொடரும், கறாராக அமலாக்கப்படும் என்று கூறிவிட்டார்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் கைவிடப்படும் என்கிறது அதிமுக அறிக்கை. ஆனால் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி, விவசாயிகளை சமாதானப்படுத்தி, பாரத்மாலா பரியோஜன் திட்டத்தின் கீழ் அந்த எட்டு வழிச்சாலை போடப்பட்டே தீரும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்.
ஏற்கெனவே, காவிரி ஆற்றின் குறுக்காக கர்நாடகத்தில், மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது. அணை கட்டினால் காவிரிக்கு, இப்போது தானாக வந்து கொண்டிருக்கும் மழைநீர் கூடவாராமல் தடுக்கப்பட்டுவிடும்.
தமிழக நலனுக்கான அதிமுக கோரிக்கைகளை, தேர்தல் முடியும் முன்பே, ஆட்சி அமையும் முன்பே, அமலாக்க முடியாது என்று பாஜக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
பின்னர், எதற்காக பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு, மோடி ஆட்சியைக் கொண்டு வருவோம் என வீதிவீதியாய் பிரச்சாரம் செய்கிறார் என்பதற்கும், அவரது கூட்டணி ஏன் நீடிக்க வேண்டும் என்பதற்கும் தமிழக முதல்வர் பதில்கூற வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT