டிக்டாக் செயலிக்கு தடை; முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டிக்டாக் செயலிக்கு தடை;  முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நடவடிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் புது உத்தரவை விதித்துள்ளது.

கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

அதில் இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் இங்கும் தடை விதிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தை ஏன் இங்கும் கொண்டு வரக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் டிக் டாக் (Tic tok) செயலியைத் தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது.

இதை எதிர்த்து, அந்தச் செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து ஒத்திவைத்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு தடைவிதிக்கவும் மறுத்துவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு தரப்பு வாதத்தை வைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, இதனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பயன்பாட்டாளர்கள் ஒரு கோடிபேர் உள்ளனர், எங்கள் தரப்பு விளக்கம் கேட்காமலேயே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என சீன நிறுவனம் சார்பில் மீண்டும் வாதம் வைக்கப்பட்டது.

இதை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்.24 அன்று தீர்ப்பளிக்கும் முன் இருதரப்பு வாதங்களைக்கேட்டு தீர்ப்பளிக்கவேண்டும். அன்றே தீர்ப்பளிக்க வேண்டும் அவ்வாறு உரிய உத்தரவு பிறப்பிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் மதுரைக்கிளை நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in