Published : 02 Apr 2019 07:33 PM
Last Updated : 02 Apr 2019 07:33 PM
'நீட்' தேர்வு ரத்து தொடர்பான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்றுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
''பல்வேறு மாநில மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,மாநில உரிமைகளுக்கு எதிரான நீட் ரத்து செய்யப்படும் . மாநிலங்களே தாங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
இதன் மூலம் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் ,மாநில அரசுகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. நீட் ரத்து இப்பிரச்சனையைத் தீர்க்கும்.
தனியார் மருத்துவக் கல்லூரி, தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக காங்கிரஸ் தெளிவுபடுத்தவில்லை. அது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிக்கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.
இது மட்டும் போதாது. கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். உயர் கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பது குறித்து அறிவிப்பு இல்லை. மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்குப் பதிலாக பொது மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படும் என்ற காங்கிரஸ் திட்டம் வரவேற்புக்குரியது.
மருத்துவச் சேவை பெறும் உரிமை சட்டமாக்கப்படும் என்பது வரவேற்புக்குரியது. மோடி கொண்டுவந்த அயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மிகப்பெரிய ஏமாற்று வேலை. ஜி.டி.பி.யில் 3% சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் என்ற காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி வரவேற்புக்குரியது. கல்விக்கு 6% ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும் வரவேற்புக்குரியது''.
இவ்வாறு ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT