Published : 10 Apr 2019 12:00 AM
Last Updated : 10 Apr 2019 12:00 AM

தேனியில் அனல் பறக்கும் பிரச்சாரம்; பிரதமர் மோடி, ராகுல் அடுத்தடுத்து வருகை: கூட்டத்தை திரட்டுவதில் அதிமுக, காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரம்

தேனியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பிரச்சாரக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்துவதில் இரு கூட்டணிக் கட்சியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தேனி தனிக்கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ப.ரவீந்திரநாத்குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதியில் மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.

துணை முதல்வரிடம் உள்ள நல்ல அறிமுகத்தால், பிரதமர் மோடி ஏப். 13-ம் தேதி தேனியில் பிரச்சாரம் செய்ய வருகிறார். இந்த அறிவிப்பு வெளியானதும், ராகுலும் தேனிக்கு 12-ம் தேதி பிரச்சாரத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இரு கூட்டணிக் கட்சிகளும் தேசிய தலைவர்கள் வருவதை தங்களின் முக்கிய பிரச்சார பலமாக மாற்றத் திட்டமிட்டு இரு தரப்பும் களத்தில் இறங்கி உள்ளனர். பிரதமருக்காக க.விலக்கிலும், ராகுல்காந்திக்காக தேனி பைபாஸ் சாலையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு, மைதானமாக தயார்படுத்தி வருகின்றனர்.

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்தும் ஏராளமான கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களை திரட்டி அழைத்துவர ஏற்பாடு நடக்கிறது.

இது குறித்து அதிமுக தேர்தல் பணிக்குழு முக்கிய நிர்வாகி கூறியதாவது:தொகுதிக்கு 1 லட்சம் பேர் என6 லட்சம் பேரைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 300 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 5 முதல் 10 வாகனங்களில் வரத் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்திலேயே தேனி கூட்டம்தான் பிரம்மாண்டமாக இருக்கும்.

ஓபிஎஸ்ஸுக்காக வரும் பிரதமர்முன்னிலையில் அவரது செல்வாக்கை காட்ட வேண்டியுள்ளது.

தேனி நகர் மற்றும் தொகுதியிலிருந்து அனைத்து தொண்டர்களையும் பங்கேற்கச் செய்வோம் என்றார்.

திமுக கூட்டணி நிர்வாகிகள்கூறும்போது, ‘‘இளங்கோவனுக்காக ராகுல்காந்தி தேனி வருகிறார். பல பகுதிகளுக்கு இளங்கோவனால் பிரச்சாரத்துக்கு செல்லமுடியவில்லை. இந்த பகுதிகளிலிருந்தெல்லாம் மக்களை திரட்டி ராகுல் கூட்டத்துக்கு அழைத்து வருவோம். திமுக நிர்வாகிகளிடம் கூட்டம் சேர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேனியில் கணிசமான காங்கிரஸார் இருப்பதால் முழுமையாக பங்கேற்பர். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால், இக்கூட்டத்தின் தாக்கம் அங்கும் எதிரொலிக்கும் வகையில் தேனி கூட்டத்தில் கூட்டணி கட்சியினரை திரட்டுவோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x