Published : 09 Apr 2019 12:00 AM
Last Updated : 09 Apr 2019 12:00 AM

அதிமுகவுக்கு வாக்குகளை சேகரிப்பது மட்டுமல்ல எதிரணியினரின் வாக்குகளை திசை திருப்புவது அவசியம்: பூத் நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ‘டிப்ஸ்’

அதிமுகவுக்கு வாக்குச் சேகரிப்பது மட்டுமின்றி, எதிரணிக்கு வாக்கு கள் செல்லாமல் தடுக்கும் பணி யிலும் அதிமுகவினர் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

தேனி மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதி முடிவு மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதி வாக்காளர்களிடமே உள்ளதாக அதிமுக முழுமையாக நம்புகிறது. உசிலம்பட்டி தொகுதியிலும் அதிமுக.வாக்குகளை அமமுக குறி வைக்கிறது. இதனால் சோழவந்தான் தொகுதியைப் பெரிய அளவில் நம்பியுள்ளது.

இத்தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். சோழவந்தான் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் நேற்று கிராமங் கள்தோறும் சென்று சந்தித்தார். பொறுப்பாளர்களைத் தவிர வேறு யாரும் இக்கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அதிமுக மூலம் பதவியைப் பெற்று தனது வாழ்க்கையை வளமாக்கிக் கொண்ட அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் இன்று அதிமுகவையே தோற்கடிக்க ஊர், ஊராக சுற்றி வருகிறார்.

அவரது தாத்தாவே வந்தாலும் இந்த இயக்கத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்ற வரலாற்றை ஏற்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை காலை, மாலை என இரு வேளைகளிலும் மக்களைச் சந்தித்து விளக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் அரசு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், இதை முடக்கி வைத்தவர் மு.க.ஸ்டாலின் என தெளிவாகக் கூற வேண்டும். அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தருவதுடன் நமது கடமை முடிந்துவிடக்கூடாது. எதிரணியில் உள்ளவர்களுக்கு யார் வாக்களிப்பர், அதை அதிமுக வுக்குச் சாதகமாக எப்படி திசை திருப்புவது, முடியாத நிலையில் எதிரணிக்கு விழவிடாமல் செய்வது எனப் பல்வேறு வழிகளில் சிந் தித்து, திட்டமிட்டுப் பணியாற்ற வேண்டும். இதுதான் தேர்தல் தந்திரம்.

தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளில், சோழவந்தானில் மட்டும் 1 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுத்தந்தோம் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். இன்னும் 10 நாட்களே இருப்பதால் இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் உங்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்றார். அதைத் தொடர்ந்து வாக்குச் சாவடி வாரியாக உள்ள பிரச்சினை கள், அவற்றைத் தீர்ப்பது குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். இன்று இதே பாணியில் உசிலம்பட்டி தொகுதி வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களை அமைச்சர் சந்திக்கிறார்.

ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவார்

பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் அமைச்சர் பேசுகையில், மத்தியில் பாஜக ஆட்சியும், மோடி பிரதமராவதும் உறுதி என்ற நிலையே உள்ளது. ப.ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றதும் மத்திய அமைச்சராகிவிடுவார். அப்போது இந்தத் தொகுதிக்கு முக்கியத் திட்டங்கள் உடனே வந்து சேரும். மற்றவர்கள் யார் வென்றாலும் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. இதை முக்கிய நிர்வாகிகள், சங்கத்தினர், வர்த்தகர்கள், விவசாயிகள் எனப் பலரிடமும் தெரிவித்து பெரிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x