Published : 18 Apr 2019 08:06 PM
Last Updated : 18 Apr 2019 08:06 PM
அடுத்த தேர்தலில் ரஜினி கட்சித் தொடங்கி போட்டியிடுவார் என்று ரஜினி ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ வருவேன், அதோ வருகிறேன் என 1996-ம் ஆண்டுமுதல் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து வந்த ரஜினி ஜெயலலிதா மறைவுக்குப்பின் திடீரென தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை தான் நிரப்ப உள்ளதாகவும் பேசினார்.
சூட்டோடு சூட்டாக ரசிகர்களை இணைத்து 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில் ரசிகர்களை ஒருங்கிணைத்தார். மாவட்ட, நகர, ஒன்றிய, கிராம அளவில் நிர்வாகிகள் நியமித்து செயல்படுத்தி வருகிறார் ரஜினி. இது கட்சியாக உருவாக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டாலும், ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என ரஜினி அறிவித்துள்ளதாலும் ரசிகர்கள் நாடாளுமன்ற தேர்தலில் குழப்ப மனநிலையில் உள்ளனர்.
ஏனென்றால், ரஜினி "இந்த மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்ததால் யாருக்கும் ஆதரவு இல்லை, வேலையும் இல்லை என்பதால் ரஜினி ரசிகர்களிடையே சிறிய அளவில் அதிருப்தியை உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் '2.0', ’பேட்ட’ அடுத்து ‘தர்பார்’ உள்ளிட்ட தொடர் படங்களாக ரஜினி தருவதால் ரசிகர்கள் அதை மறந்துவிட்டார்கள். தற்போது மக்களவைத் தேர்தலுக்கு ரஜினி ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களித்துவிட்டார்கள். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சீமான், கமல் ஆகியோருக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக பேசப்படுகிறது.
இதை அடுத்து ரஜினி ரசிகர்கள் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர், அடுத்ததாக வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சித் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதன் வெளிப்பாடாக #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார். தற்போது இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இம்முறை வாக்களித்துவிட்டேன், அடுத்தமுறை கண்டிப்பாக ரஜினிக்குத்தான் என் வாக்கு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திடீரென்று உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இந்தியளவில் முதலிடத்தில் இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT