Published : 24 Apr 2019 05:14 PM
Last Updated : 24 Apr 2019 05:14 PM

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்; ஏப்.27, 28 தேதியில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாளை தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், 27, 28 தேதிகளில் அது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஏப்.25 அன்று (நாளை) தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் இது வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்கள் ஏப்ரல் 26-ம் தேதி முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  கடந்த 24 மணி நேரத்தின் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கோடை மழை காரணமாக மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 5 செ.மீ மழையும், வால்பாறையில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x