Last Updated : 20 Apr, 2019 12:00 AM

 

Published : 20 Apr 2019 12:00 AM
Last Updated : 20 Apr 2019 12:00 AM

கடினமான வினாத்தாள், தேர்வு முறை மாற்றங்கள் எதிரொலி: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது

கடினமான வினாத்தாள், தேர்வு முறை மாற்றங்கள் காரணமாக நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.42 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகளை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. ஆனால், அதில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் வகைப்பிரிவு பட்டியல் விவரம் இடம்பெறவில்லை. இதேபோல், பாடவாரியாக சென்டம் எடுத்தவர்களின் எண் ணிக்கை மற்றும் அரசுப் பள்ளிகளின் 100 சதவீத தேர்ச்சி விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் பள்ளிகளிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கும் என்பதால் வெளியிடப் படவில்லை என்று கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாலேயே அதன் விவரங்கள் வெளியிடப் படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 தேர்வு இந்த ஆண்டு மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 69 ஆயிரத்து 225 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 550-க்கும் மேல் 2.2 சதவீதம் பேரும், 500-க்கும் மேல் 8 சதவீதம் பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். அதாவது, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 1.4 லட்சம் பேர் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்து 84 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. அதேநேரம் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. தேர்ச்சி பெற்றதில் கிட்டதட்ட 60 சதவீதம் பேர் 350-க்கும் கீழேதான் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

குறைந்த சென்டம்

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை யிலும் பெரிய அளவில் பின்ன டைவு ஏற்பட்டுள்ளது. அரசைப் பொறுத்தவரை சென்டம் விவரம், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை உட்பட தேர்ச்சி விகிதம் சாதனைகளாகவே பார்க் கப்படுகின்றன. மக்களின் எண்ண ஓட்டங்களும் அவ்வாறே உள்ளன. எனவே, இவை பொதுவெளியில் வெளியிடப்படும்போது சர்ச்சை எழக்கூடும். மேலும், இத்தகைய மதிப்பெண் வகைப்பிரிவு மற்றும்சென்டம் விவரங்கள் வெளியிடுவதும் மாணவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவதாக தகவல்கள் வந்தன. அதையும் கருத்தில் கொண்டு நடப்பாண்டு முதல் அந்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் கூறியதாவது:நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி நடப்பாண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்களும் பெரும்பாலும் கடினமான முறையிலேயே வடிவமைக் கப்பட்டன. கணிதம், இயற்பியல், விலங்கியல், வணிகவியல் உட்பட பாட வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்தன. எல்லா பாடங்களிலும் சராசரியாக 40 முதல் 50%கேள்விகள் புரிந்து பதில் அளிக்கும்படியாகவே கேட்கப்பட்டன. இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப நன்றாக படிக்கும் மாணவர் கள்கூட தங்களை தகவமைத்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இவை தேர்வு முடிவுகளிலும் எதிரொலித்தது.

விடைத்தாள் திருத்தலின்போது மாணவர்கள் பலர் நுண்ணறிவு கேள்விகளுக்கு திணறியிருந்தனர். அதனால் பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் சரிந்துள்ளன. பத்தாம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண் எடுத்த பலரும் பிளஸ் 2-வில் 70 சதவீத மதிப்பெண்களே பெற்றுள்ளனர். மாணவர்கள் நலன் கருதி குறைவாக இருந்த தேர்ச்சி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதே நேரம் இந்த மாணவர்கள் நுழைத்தேர்வு மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சிறந்து விளங்க இந்த மாற்றங்கள் மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x