Published : 26 Apr 2019 03:49 PM
Last Updated : 26 Apr 2019 03:49 PM

வரும் 30-ம் தேதி வடதமிழக கரை நோக்கி புயல் வரக்கூடும்: ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி வட தமிழக கடலோரம் வர வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 1500 கி.மீ .தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெறக்கூடும். தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும். வரும் 30-ம் தேதி வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் நாளையும் (ஏப். 26, 27) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும், வரும் 28 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வரும் 30-ம் தேதி வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது புயலின் நகர்வைப் பொறுத்து மாறக்கூடும். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ரெட் அலர்ட் என்கிறார்களே? அது விடப்பட்டுள்ளதா?

ரெட் அலர்ட் என்பது இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படுவதல்ல. நிர்வாகத் துறையின் தேவைகளுக்காக ஏதேனும் ஒரு பகுதியில் கனமழை இருந்தால் எச்சரிக்கைக்காக சிவப்பு வண்ணத்தில் காட்டப்படும். சிவப்பு வண்ணத்தில் பார்ப்பதெல்லாம் ரெட் அலர்ட் கிடையாது.

தற்போதைய நிகழ்வு என்ன?

தற்போதுள்ள நிலையைப் பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சுமார் 1500 கி.மீ. தொலைவில் உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி அது நகரும். வரும் 30-ம் தேதி வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. நகர்வைப் பொறுத்து அது மாறும்.

கோடைகாலத்தில் 1966-ல் ஒரு புயல் கடலூருக்கு அருகே கரையைக் கடந்துள்ளது. 2010-ல் லைலா புயல், 2016-ல் ரோலோ புயல் கரைக்கு அருகே வந்துள்ளது. 

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x