Published : 20 Apr 2019 02:05 PM
Last Updated : 20 Apr 2019 02:05 PM

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கமான சராசரி அளவைவிட குறைவாகப் பெய்ததால் இந்த ஆண்டு கோடைகாலம் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருக்கும் என கூறப்பட்டது. வழக்கமான அளவைவிட வெப்பநிலையும் ஓரிரு டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

கோடைகாலம் தொடங்கும் முன்னரே மார்ச் மாதத்திலேயே வெயில் அதிகம் இருந்தது. இந்த மாதம் பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில் சென்னையைத் தவிர பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்ட நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் பல மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x