Published : 12 Apr 2019 12:41 PM
Last Updated : 12 Apr 2019 12:41 PM

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது; மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம்: உச்ச நீதிமன்றம்

பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவுப்படி மே 28-ம் தேதி ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி ஆலையைத் திறக்க அனுமதி வழங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ''இது தொடர்பாக தமிழக அரசும் வேதாந்தா நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெற்றுக்கொள்ளலாம்'' என்றும் தெரிவித்தனர்.

இத்தீர்ப்பை பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அப்போதில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இதற்கிடையே பராமரிப்புப் பணிகளுக்காகவும் கழிவுகளை அகற்றவும் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் நாங்கள் தலையிட முடியாது'' என்றுகூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், ''இதுபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால், ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும்'' என்று எச்சரித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x