Last Updated : 24 Apr, 2019 09:36 AM

 

Published : 24 Apr 2019 09:36 AM
Last Updated : 24 Apr 2019 09:36 AM

இடமாற்றம் செய்யப்படுமா ஆம்னி பேருந்து நிலையம்?- நெரிசலால் தவிக்கும் கோவை மக்கள்!

கோவை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான  கோவையில் நாளுக்கு நாள் வாகனப்  போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சாலை வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளும் அதிகரிக்கின்றன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, காவல் துறையினர் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சிக்னல்கள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மேலும், நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வாகன தணிக்கை நடத்தி, அதிவேகமாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலை விதிகளை மீறியும் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து, அபராதம் விதித்து வருகின்றனர்.

அரசு, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் போன்ற இலகு ரக வாகனங்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதுதவிர, விதி மீறும் வாகன ஓட்டுநர்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல, கோவையில் மாலை  முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கு  முக்கியக் காரணமாக ஆம்னி பேருந்துகள் உள்ளன.

கோவை-சத்தி சாலையில், காந்திபுரம் அருகில் தற்போது ஆம்னி பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, மதுரை நாகர்கோவில், தூத்துக்குடி,  கும்பகோணம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட வெளி மாநில நகரங்களுக்கும் இயக்கப்படுகின்றன.

தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து சமூக ஆர்வலர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறும்போது, “ஆம்னி பேருந்து நிலையம், நகரின் முக்கியப் பகுதியில் இருப்பது போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கிறது. இந்த ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் முறையாக இயக்கப் படுவதில்லை. ஒவ்வொரு பேருந்து நிறுவனமும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைவிட கூடுதல் இடத்தை ஆக்கிர மித்துள்ளது. மேலும், பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவதற்கு மட்டுமே இந்த பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநகராட்சி விதிகளை மீறி, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்துகளைக் கழுவுவது, பஞ்சர் போடுவது, ரிப்பேர் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பேருந்து ஓட்டுநர்கள் தங்குமிடமாகவும் இது மாறிவிட்டது.

இதுதவிர, ஆம்னி பேருந்துகள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்துமட்டுமே பயணி களை ஏற்றுவதில்லை. ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, காந்திபுரம், லட்சுமி மில்ஸ் என முக்கியப் பகுதிகளில் உள்ள  பேருந்து நிறுத்தங்களின் அருகே நிறுத்தி, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். ஆம்னி  பேருந்துகள் வழக்கமான பேருந்துகளைக் காட்டிலும், பெரியதாக உள்ளது. இதனால் ஒரே சாலையில் இரண்டு ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து நிறுத்தும்போது, அவ்வழியாக பிற எந்த வாகனங்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு,  நெருக்கடி அதிகரிக்கிறது.

வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அதிகம் நிறைந்த காந்திபுரத்தில் ஆம்னி பேருந்து நிலையம்  இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது மட்டுமின்றி, அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, ஆம்னி பேருந்து நிலையத்தை, காந்திபுரத்தில் இருந்து, மாநகருக்கு வெளியே வேறு பகுதிக்கு மாற்ற பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டது.

இதையடுத்து, கொடிசியா பகுதியில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில்,  புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், வருவாய்த்  துறை அதிகாரிகள், இந்த இடத்தை மாநகராட்சிக்கு வழங்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், சின்னியம்பாளையம் அருகேயுள்ள  நீலாம்பூரில், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கவில்லை.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகத்தில்,  ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் தொடங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு வர மேலும் சில ஆண்டுகளாகும். இந்த திட்டத்தை மத்திய நெடுஞ்சாலைத் துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

அதுவரை ஆம்னி பேருந்து நிலையம், காந்திபுரம் அருகிலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், நெரிசலும் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் வரை, சத்தி சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தை, வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “வெள்ளலூரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் வரை, அவிநாசிசாலையில்  பீளமேடு, கொடிசியா போன்ற பகுதிகளில்,  காலியாக உள்ள தனியார் இடத்தை குத்தகை, வாடகை அடிப்படையிலாவது மாநகராட்சி நிர்வாகம் பெற்று, தற்காலிகமாக அங்கு ஆம்னி பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வெள்ளலூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலைய  வளாகத்தில், ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். அப்போது, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x