

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைக்குள் வட்டாட்சியர் சம்பூரணம் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஆட்சியர் அறிக்கை அனுப்பினார். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் சம்பூரணத்தை தேர்தல் ஆணையம் நேற்று காலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் நடந்த தொடர் விசாரணையில் அவருடன் சென்ற, ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன் உள்ளிட்ட 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு, தற்போது, சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தவிவகாரம் பெரிதாக வெடித்து கிளம்பவே கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் நடராஜன், வட்டாட்சியர் சம்பூர்ணம், மதுரை மேற்கு தொகுதி தேர்தல் அலுவலர் குருசங்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது:
“மதுரை சம்பவம் தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்துகிறார். அவர் அளிக்கும் அறிக்கை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜண்டுகள் விருப்பப்பட்டால் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு இருக்கலாம். இது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. ஏற்கெனவே இருந்த நடைமுறைதான்.
இச்சம்பவத்தில் கூடுதல் தேர்தல் அதிகாரி மதுரைச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். அதன்பின்னர் முடிவெடுக்கப்படும்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பாதுகாப்புக்காக 13 கம்பெனி துணை ராணுவப்படை வர உள்ளது.
10 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் மறுவாக்குப்பதிவு தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும்.
பொன் பரப்பியில் மறுவாக்குப்பதிவு குறித்து திருமாவளவன் கோரிக்கை குறித்து அம்மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்தபின்னர் முடிவெடுக்கப்படும்”
என தெரிவித்தார்.