Published : 18 Apr 2019 03:04 PM
Last Updated : 18 Apr 2019 03:04 PM

கூடலூர் அருகே தேர்தல் அலுவலர்களின் குளறுபடி: 8 பேருக்கு மறுவாக்குப் பதிவு

கூடலூரில் தேர்தல் அலுவலர்களின் குளறுபடியால் துப்புக்குட்டிபேட்டையில் 8 பேருக்கு மறுவாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 1 மணியளவில் 32.7 சதவீதம் வாக்கு பதிவானது.

நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓம் பிரகாஷ் பள்ளி வாக்குச்சாவடியில் காலையிலேயே வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதமானது.

 

குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சோலாடாமட்டம், தூதூர்மட்டம், அப்பிள் பீ வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.

 

கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 113-வது வாக்குச்சாவடியான துப்புகுட்டிபேட்டையில் தேர்தல் அலுவலர்களின் குளறுபடியால் 8 பேரின் வாக்கு பதிவாகவில்லை என புகார் எழுந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு 8 பேருக்கு மறுவாக்கு பதிவுக்கு அனுமதி அளித்தார்.

 

182-வது வாக்குச்சாவடியில்  தேர்தல் அலுவலர்கள் பான் கார்டு கொண்டு வந்த வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. வாக்காளர் வாக்குவாதம் செய்து, 11 ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். வாக்குவாதம் செய்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 

இதுகுறித்து வாக்காளர்கள் கூறும் போது, ''தேர்தல் பணியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தாண்டு தனியார் பள்ளிஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. இதனால் அவர்கள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x