Last Updated : 30 Apr, 2019 11:34 AM

 

Published : 30 Apr 2019 11:34 AM
Last Updated : 30 Apr 2019 11:34 AM

ஆலங்குளம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 வயது சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (35). இவரது உறவினர் மகேஷ் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு விருந்து உபசரிப்பு செய்ய ஆட்டிறைச்சி வாங்குவதற்காக ராஜசேகர் கேடிசி நகரைச் சேர்ந்த தனது மகள் தனிகா (3), உறவினர்கள் முருகன் (58) நிரஞ்சன் குமார் (28), நடராஜன் ஆகியோருடன் காரில் அடைக்கலப்பட்டணத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் சென்று கொண்டிருந்தார்.

காரை ராஜசேகர் ஓட்டிச் சென்றுள்ளார். ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து பகுதியில் சென்றபோது கார் மீது எதிரே திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோதியது. லாரிக்கு அடியில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x