Published : 30 Apr 2019 12:00 AM
Last Updated : 30 Apr 2019 12:00 AM

சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான கிண்டி கத்திப்பாராவில் 2-வது கட்ட திட்டத்துக்கு 132 அடி உயரத்தில் உயர்மட்ட பாதை: மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான கிண்டி கத்திப்பாராவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 132 அடி (40.4 மீட்டர்) உயரத்தில் பிரம்மாண்டமாக உயர்மட்ட பாதை அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான கிண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வண்ணத்து பூச்சி உருவம் போன்று அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேம்பாலம் 2008-ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இது சென்னையில் இருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்தப் பாலத்தின் அருகே முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதையில் வழித்தடம் அமைத்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள காலி இடங்களில் ரூ.14 கோடி செலவில் மெட்ரோ ரயில் பயணிகள், பேருந்து பயணிகள், மின்சார ரயில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், 5.85 லட்சம் சதுரஅடி காலி இடத்தில் பொழுதுபோக்கு பூங்கா, நடைபாதை, திறந்தவெளி கலையரங்கம், உணவகங்கள், கடைகள், கழிப்பிடங்கள், வங்கி ஏடிஎம்,சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், மோட்டார் சைக்கிள், கார் நிறுத்துமிடம், புல்தரை அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கத்திப்பாரா மேம்பாலம் அருகே இடதுபுறத்தில் மற்றொரு பிரம்மாண்டமான உயர்மட்ட பாதை அமைத்து மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னையில் இல்லாத அளவுக்கு 40.4 மீட்டர் உயரத்தில் (132 அடியில்) இரண்டுஉயர்மட்ட பாதை அமைக்கப்படஉள்ளது. பூந்தமல்லியில் இருந்து வரும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் வகையில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போதுள்ள வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதேபோல், 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் இணைகிறது. அதாவது, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், போரூர், ஆலந்தூர், சின்னமலை, ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் சென்றடையும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்னையில் இதுவரை இல்லாத வகையில் 40.4 மீட்டர் உயரத்தில் உயர்மட்ட பாதை அமைக்கவுள்ளோம். ஏற்கெனவே, முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 16 மீட்டர் உயரத்திலும், கத்திப்பாரா பாலம் அருகே 24 மீட்டர் உயரத்திலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். எனவே, சென்ட்ரல், எழும்பூர் போல் கிண்டி கத்திப்பாரா சென்னையில் மற்றொரு முக்கிய மான போக்குவரத்து மையமாக வரும் சில ஆண்டுகளில் மாறிவிடும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x