

வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு அமமுக துணை பொதுச் செயலாளர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்த்திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநரும், வசன கர்த்தாவுமான மகேந்திரன் மறைந்த தகவலறிந்து வருத்தமுற்றேன். மனித மனங்களின் உணர்வுகளை, வாழ்வின் அழகியலை நுட்பமாக காட்சிப்படுத்தும் திரைச்சித்திரங்களைத் தந்தவர் மகேந்திரன்.
தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாக, அவரது உதிரிப்பூக்கள் படம் கொண்டாடப்படுகிறது. தனிப்பட்ட முறையில் எம்ஜிஆர் மீது அவர் கொண்டிருந்த நேசத்தைப் பல முறை பதிவு செய்திருக்கிறார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமிழ்த்திரையுலகுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.