Published : 09 Apr 2019 06:18 AM
Last Updated : 09 Apr 2019 06:18 AM

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது: அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட் டத்துக்கான அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இத்திட் டத்துக்காக நிலங்களை கையகப் படுத்தியது செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் பாரத்மாலா திட்டத் தின் கீழ் சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கி.மீ. தொலைவுக்கு 8 வழிகள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப் பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. நில அளவீடு பணிகள் நடந்தபோது, அதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்க ளும் போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே, பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலஆர்ஜிதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பதால் இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும் காங்கிரஸ் வழக்கறி ஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், தருமபுரி தொகுதி எம்பி என்ற முறையில் அன்பு மணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் பிரத் யேகமாக நடந்தது. இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கே.பாலு, கே. சக்திவேல், ஏ.பி.சூர்ய பிரகாசம், டி.மோகன், டி.நாகசைலா, வி.பாலு ஆகியோரும், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அரசு ப்ளீடர் சி.திருமாறன் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த டிசம்பரில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பு விவரம் வருமாறு:

சேலம் - சென்னை இடையே பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறோம் என்ற நோக்கில் இத்திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேலம் - சென்னை இடையே 3 நெடுஞ்சாலைகள் இருக் கும்போது இந்த 8 வழிச்சாலை தேவையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதுவும் முதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் சென்னை - மதுரை திட்டம்தான் உள்ளது. பின்னர் அதை சேலம் - சென்னை திட்டமாக மாற்றியுள்ளனர். இதுபோன்ற ரூ. 10 ஆயிரம் கோடி செலவிலான திட்டங் களை செயல்படுத்தும் முன்பாக மத்திய அரசு அதிக சிரத்தை எடுத்து செயல்படுத்தி இருக்க வேண்டும்.

60 நாளில் திட்ட அறிக்கை

ஆனால், இத்திட்டத்துக்கான அறிக்கை சாதக, பாதகங்களை முழுமையாக ஆராயாமல் வெறும் 60 நாட்களில் தயாரிக்கப்பட்டு இருப்பது கேலிக்கூத்தான ஒன்று. அமெரிக்கா வில் உள்ள 2 நெடுஞ்சாலைகளை இணைக்க 1944 ல் இருந்து 1960 வரை திட்டம் குறித்து நன்கு ஆராய்ந்து அதன்பிறகுதான் செயல்படுத்தியுள் ளனர். இத்திட்டத்தால் அடர்ந்த வனப் பகுதி, குளங்கள், குட்டைகள், ஆறு கள் உள்ளிட்ட நீர்நிலைகள், விவசாய நிலங்கள், பண்ணைகள், குடியிருப்பு கள் கடுமையாக பாதிக்கப்படும்.

சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் இத்திட்டத்தை ஆரம்பித் துள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பொதுமக்களிடமும் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட வில்லை. இது வண்டியின் முன்னால் இருக்க வேண்டிய குதிரை, வண்டிக்கு பின்னால் இருந்தால் எப்படி இருக் குமோ அப்படி இருக்கிறது. மேலும், இத்திட்ட அறிக்கையையும், அதன் சாத்தியக்கூறுகள் குறித்த சாதக, பாதகத்தையும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆராயாமல், தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்துள்ளது. இவ்வாறு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் திட்ட அறிக்கை தயாரித்து திட்ட அறிவிப்பாணை வெளியிட்டதே சட்டவிரோதம்.

அப்பாவி பொதுமக்கள் பலர் இன்னும் விவசாயத்தையே உயிர் மூச்சாக கொண்டுள்ளனர். அவர்களை யும், பொதுமக்களையும் சட்ட ரீதியாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகி றது. வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், மரங்களையும் வெட்டி சாலைகளை அமைக்க இடம் கொடுக்க முடியாது. நிலஆர்ஜித நடவடிக்கையும் சட்டவிரோதமாக நடந்துள்ளது.

இதை எதிர்த்து நடந்த அமைதி யான போராட்டங்களையும் அரசு இயந்திரம் எழுதப்படாத தடை உத்தரவு மூலம் பலப்பிரயோகம் நடத்தி ஒடுக்கி யுள்ளது. எனவே, உரிய விதிமுறை களைப் பின்பற்றாமல் அவசரகதியில் வெளியிடப்பட்ட இத்திட்டத்துக்கான அறிவிப்பாணை ரத்து செய்யப் படுகிறது. இத்திட்டத்துக்காக மேற் கொள்ளப்பட்ட நிலஆர்ஜித நடை முறையும் செல்லாது என்பதால் அதை வகைமாற்றம் செய்து, மீண்டும் சம்பந் தப்பட்டவர்களுக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

அரிய பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் கணக்கிட முடியாத அழிவை ஏற்படுத்தும்

‘‘இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை இத்திட்டத்தை அனுமதித்தால் அதன்மூலம் வனங்களுக்கு மட்டுமின்றி, வனத்தை நம்பியுள்ள அரிய பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கும் கணக்கிட முடியாத அழிவை ஏற்படுத்தும். நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் அரிய வகை கனிமங்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் மரக்கடத்த லுக்கும் இத்தகைய சாலை வழிவகுத்துவிடும்.

ஏனெனில், வனப்பகுதியில் செல்லும் இச்சாலையின் இருபுறங்களிலும் காம்பவுண்ட் சுவர் அமைத்தோ அல்லது 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை நியமித்தோ வனத்தை காக்க முடியாது. ஏற்கெனவே அளவுக்கு அதிகமான ஆக்கிரமிப்புகள், விதிமீறல்களால் தமிழகத்தில் உள்ள கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலைப்பிரதேசங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதுபோன்ற நிலை மீண்டும் உருவாகி விடக் கூடாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x