கட்சி விரோத நடவடிக்கை; 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப் பேரவைத்தலைவர் நோட்டீஸ்

கட்சி விரோத நடவடிக்கை; 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப் பேரவைத்தலைவர் நோட்டீஸ்
Updated on
1 min read

கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கடந்தவாரம் கொறடா ராஜேந்திரனால் சட்டப்பேர்வை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப் பேரவைத்தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக அரசில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. இதில் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட 3 பேரும் அடக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அது 135 ஆகக் குறைந்தது. பின்னர் அந்த இடத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் எண்ணிக்கை 117 ஆகக் குறைந்தது. பின்னர் சூலூர், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு, ஓசூர் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் காரணமாக அது 114 ஆக மேலும்  குறைந்தது.

இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு தனி அணியாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் கருணாஸ், தனியரசு தங்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தமீமுன் அன்சாரி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்.

இதேபோன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர். இவர்கள் 4 பேர் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முடிவு செய்தது.

இதையடுத்து கொறடா ராஜேந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் தனபாலைச் சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுத்தால் சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் எச்சரிக்கையை மீறி 3 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in