Published : 26 Apr 2019 07:26 AM
Last Updated : 26 Apr 2019 07:26 AM

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் தொடர்பு;  கோவையில் 6 இளைஞர்களிடம் என்ஐஏ தீவிர விசாரணை: இலங்கையில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தது உறுதியானது

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன், பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக தொடர்பில் இருந்த 6 இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக விசாரணை நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

கோவையில் இந்து இயக்கத் தலைவர் களை கொலை செய்ய முயன்றதாக, கோவையைச் சேர்ந்த 2 பேர், சென்னை யைச் சேர்ந்த 4 பேர் என 6 பேர் கோவை வெரைட்டிஹால் ரோடு போலீ ஸாரால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் ஆவார். பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். கோவையில் 3 இடங்கள், சென்னையில் 3 இடங்கள், திண்டிவனத்தில் ஒரு இடம் என மொத் தம் 7 இடங்களில் சோதனை நடத்தப் பட்டது.

இந்த சோதனையின் இறுதியில் பென் டிரைவ், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வுக்குப் பின்னர் என்ஐஏ அதிகாரிகள் டெல்லியில் உள்ள தங்களது அலுவலக தலைமைக்கு அனுப்பினர். அதேபோல், கைது செய்யப்பட்ட நபர்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் கடந்த கால செயல்பாடுகளையும் அதிகாரிகள் கண்காணித்தனர். அதில், கைது செய் யப்பட்ட நபர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பின்தொடர்ந் துள்ளனர். இதில் கோவையைச் சேர்ந்த 6 பேர் தீவிரமாகப் பின்தொடர்ந் துள்ளனர்.

மெசஞ்சரில் தகவல் பரிமாற்றம்

கைது செய்யப்பட்ட 6 பேர், அவர்களை பின்தொடர்ந்த கோவை இளைஞர்கள் 6 பேர் என மொத்தம் 12 பேரும், இலங்கையைச் சேர்ந்த சிலருடன் பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக தொடர்பில் இருந்துள்ளனர். மெசஞ்சர் மூலமாக தங்களுக்குள் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்களின் அடிப் படையிலும், இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகள் சந்தேகமடைந்து மத்திய உளவுத் துறையை உஷார் படுத்தியுள்ளனர். அவர்கள் இந்திய அரசு மூலமாக இலங்கைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர் என பரபரப் புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது என்ஐஏ அதிகாரிகள் தரப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலம் தொடர்பு

இதற்கிடையே, ஐஎஸ்ஐஎஸ் ஆதர வாளர் உட்பட 6 பேரிடம், பேஸ்புக் மூலமாக தொடர்பில் இருந்த கோவையைச் சேர்ந்த மேற்கண்ட 6 இளைஞர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் உட்பட 6 பேரிடம் எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது, என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன என்பன குறித்து விசாரித்தனர். விசா ரணைக்குப் பின்னர், அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் வேறு யாராவது தொடர்பில் இருந்தார்களா என்பது பற்றியும் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இலங்கையிலிருந்து கோவை வந்த மர்ம நபர் யார்?

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் கோவைக்கு வந்து சென்ற இலங்கை நபர் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்ஐசி) போலீஸார் ரகசிய விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை உயர் அதிகாரிகளும் அவ்வப்போது கடலோர பகுதிகளில் கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், இலங்கையின் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவர், கோவைக்கு வந்து சென்றதாகவும், அவர் கோவையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாகவும் தகவல்கள் தெரியவருகின்றன. இதனை கோவை மாநகர காவல்துறை வட்டாரத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த நபர் எதற்காக கோவை வந்தார், அவருடன் வேறு யாரேனும் வந்தனரா? அவரது பெயர், எந்த அமைப்பை சார்ந்தவர், யார், யாரையெல்லாம் சந்தித்தார், எங்கெல்லாம் சென்றுள்ளார், அவருடன் தொடர்பில் இருந்த கோவையைச் சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளும், எஸ்ஐசி போலீஸாரும் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x