Last Updated : 27 Apr, 2019 11:32 AM

 

Published : 27 Apr 2019 11:32 AM
Last Updated : 27 Apr 2019 11:32 AM

குழந்தை விற்பனை விவகாரம்; ராசிபுரத்தில் இடைத்தரகர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை; மதுரை விரைந்த தனிப்படை

குழந்தை விற்பனை விவகாரத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உதவியாளர், அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இடைத்தரகர்களான 3 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா என்கிற அமுதவள்ளி (50). இவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணிபுரிந்து கடந்த 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் ரவிச்சந்திரன் (55), ராசிபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்வது தொடர்பாக தருமபுரியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருடன் அமுதவள்ளி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 குழந்தைகள் விற்பனை

இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருளரசு உத்தரவின்பேரில், டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், செவிலியர் உதவியாளர், அவரது கணவரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர். அமுதவள்ளி அளித்த தகவலின் பேரில் கொல்லிமலையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முரு கேசன், ஈரோடு தனியார் மருத்துவ மனையைச் சேர்ந்த பர்வீன் என்ற செவிலியர் ஆகியோரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.

இடைத்தரகர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை

இதற்கிடையே குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் குமாரபாளையம், பவானி, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இடைத்தரகர்களான  3 பெண்களிடம் ராசிபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் மூவரும் அமுதாவுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை விரைந்த தனிப்படை

இந்நிலையில் அமுதவள்ளி தலைமையிலான கும்பல், குழந்தைகளை மதுரையில் விற்பனை செய்துள்ளதாக நம்பகத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், டிஎஸ்பி விஜயராகவன் தலைமையில்  3 தனிப்படையினர் விசாரணைக்காக மதுரைக்கு விரைந்துள்ளனர்.

பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு

குழந்தைகள் விற்பனை குறித்து உண்மையை வெளிக்கொணர அவர்களின் பிறப்புச் சான்றிதழில் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளில் ராசிபுரம் நகராட்சியில் வழங்கப்பட்ட 4,500 பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் பிறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கொல்லிமலை, நாமக்கல், ராசிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x