Published : 28 Apr 2019 01:48 PM
Last Updated : 28 Apr 2019 01:48 PM
மக்களவைத் தொகுதி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எந்திரன் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த சர்ச்சையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சித்தலைவரின் உதவியாளர் அறிவுறுத்தல்படியே பெண் தாசில்தார் வாக்குமையத்தில் நுழைந்தார் என்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். வட்டாட்சியர் சம்பூர்ணம் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம் புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை நியமித்துள்ளது. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி குருச்சந்திரனை இடமாற்றம் செய்து சாந்தக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல்களை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் மோகன் தாஸ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT