Published : 22 Sep 2014 04:15 PM
Last Updated : 22 Sep 2014 04:15 PM

கோவையில் கோலாகலமாக தொடங்கியது வாசகர் திருவிழா: `தி இந்து’ ஓர் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

`தி இந்து’ தமிழ் முதலாண்டு நிறைவையொட்டி வாசகர் திருவிழா கோவையில் விமரி சையாக கொண்டாடப்பட்டது.

கோவை அவிநாசிலிங்கம் பெண்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அரங்கத்தில் விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், `தி இந்து’ தமிழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்:

தமிழகத்தின் மக்கள் தொகை 7.25 கோடி. ஆனால், வாசிப்பு குறைவாக இருக்கிறது. 3.75 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளத்தில் அதிகமான வாசிப்புத் திறன் இருக்கிறது. `தி இந்து’ தமிழ் வருகை தமிழர்களின் வாசிப்புத் திறனைக் கூட்டி இருக்கிறது.

இன்றைய தமிழ் மாணவர்கள் பத்திரிகை வாசிப்பை பொறுப்பான வேலையாகச் செய்வது இல்லை.சிலர் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள காரை வாங்குகிறார்கள். ரூ. 4 கோடி விலையுள்ள வீட்டில் வசிக்கிறார்கள். ஆனால், பத்திரிகையை வாங்குகிறார்களா என்றால் இல்லை. வாசிப்பு குறைவதால் பல வீடுகளில் ஆங்கிலப் பத்திரிகையாகட்டும், தமிழ் பத்திரிகையாகட்டும் வாசிக்கப்படாமல் அப்படியே கிடக் கின்றன.

தமிழ் வாசிப்பு குறையக் குறைய எங்களைப் போன்று இலக்கியத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மதிக்கப்படுவதும் குறையும். இதற்கு, மாறாக வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் செய்திகளுடன் `தி இந்து’ தமிழ் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கலை என்பது எல்லாமே கலைதான். எனவே, அனைத்துக் கலைகளுக்கும் ஒரே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மொழியின் சொற்களை பத்திரிகைகள்தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை 1.99 லட்சம் சொற்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது என்பதை ஓர் ஆய்வு எடுத்துரைக்கிறது. ஆனால், தமிழ் மொழி, 10 லட்சத்துக்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புதிய சொற்கள் எவ்வாறு பத்திரிகைகளில் அறிமுகம் செய்யப்படுகிறதோ அதைப்போல தமிழ் சொற்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார்:

பட்டப்படிப்பு படிக்கும்போது, வசதி இல்லாத நிலையிலும், ஆங்கிலம் கற்பதற்காக பல சிரமங்களை எதிர்கொண்டு இந்து பத்திரிகை வாங்கிப் படித்த தருணங்கள் உண்டு. நான் எழுத்தாளனாக மாறிய பிறகு பல வகைகளில் இந்து நாளிதழ் எனக்கு உதவி செய்து வருகிறது.

கொலை,கொள்ளையைத் தாண்டி விஞ்ஞானம் சார்ந்தவற்றை வைத்து குற்றங்கள் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட விஞ்ஞான செய்திகளைக் கொண்ட எனது கிரைம் நாவல்களுக்குப் பக்கபலமாக இருந்தது இந்து நாளிதழ். ஒவ்வொரு முறையும் ஏதாவது மருத்துவ, விஞ்ஞானச் செய்திகள் இந்து நாளிதழில் கிடைக்கும். நான் 1500-க்கும் அதிகமான நாவல்கள் எழுதக் காரணமாக இருந்தது இதுவே. அந்த நன்றிக் கடனுக்காகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

அதேபோல இந்து என்ற பெயர் என் வாழ்க்கையில் பிரபலமானது. `இந்துவின் இன்னொரு பக்கம்’, `இந்து சிரிக்கிறாள்’, `இனிமேல் இந்து’, `இந்துவும் நானும்’ உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளேன்.

சினிமாவில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நான் அதைவிட்டு ஒதுங்கி நிற்கிறேன். புதிய கருத்துக்களை அனுமதிக்க மறுக்கின்றனர். அனைவருமே நீங்கள் சென்னைக்கு வர வேண்டும் என்கிறார்கள். சென்னைக்கு வந்தால் நான்கு மடங்கு புகழும், பணமும் கிடைக்கும் என ஒரு இயக்குநர் என்னிடம் கூறினார். ஆனால், எதைச் செய்தாலும் கோவையில் இருந்து கொண்டு சாதித்துக் காட்டுவேன் என்றேன். அதை சாதித்து விட்டேன்.

சினிமாவில் உள்ள மதிப்பைக் காட்டிலும், எனக்குப் பத்திரிகைத் துறையில் சிம்மாசனம் கொடுத்து அமர வைத்துள்ளார்கள். பத்திரிகை உலகம் மகாபாரதம் போன்றது. மகாபாரதத்தில் பீஷ்மர் ஒருவர் தான் உன்னதமானவர், நடுநிலையானவர். பத்திரிகை உலகில் இந்து நாளிதழ் பீஷ்மரை போன்றது என்றார்.

கோவை கேபிட்டல் நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர் டி.பாலசுந்தரம்:

பத்திரிகையாளர்களுக்குப் பெரிய கடமை இருக்கிறது. செய்தியை எப்போது, எங்கு தருவது என்ற சமூகக் கடமை இருக்கிறது என காந்தி சொன்னார். ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமா என்றால் இல்லை. தற்போதைய நிலையில் செய்தித் தாள்களின் செயல்பாடுகள் சிக்கலான நிலையில் உள்ளதாக நினைக்கிறேன்.

தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளங்கள் சில மணித்துளிகளில் நிகழ்வுகளை வேகமாகக் கொண்டுபோய் சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுநாள் காலையில் செய்தித் தாள்களில் எந்த விதமான செய்தியைக் கொண்டு செல்ல முடியும் என்பதுதான் சந்தேகம். இதிலிருந்து தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள செய்தித்தாள் தனது நடவடிக்கையில் என்ன செய்யப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது.

செய்தித்தாள் எனும்போது புத்தகங்களைப்போல வைத்துப் படிக்காமல் வாசகர்கள், உடனடியாகப் படித்துவிடுவது நல்ல விஷயம். செய்தித்தாள்களில் பத்திகளாக செய்தி வரும்போது உடனடியாக படித்துவிடத் தூண்டுகிறது. எனவே, வாசிப்புத் திறனை வளர்ப்பதில் பத்திரிகைகள் தூண்டுகோலாக அமைகின்றன.

குறிப்பாக, `தி இந்து’ தமிழ் நாளிதழ் செய்தி வழங்குவதில் சிறப்பான யுக்திகளைக் கையாண்டு வருவது நன்றாக உள்ளது. நெய்தல் நிலத்தில் வசிப்பவர்களின் இடர்பாடுகளை வெளிப்படுத்தும் கட்டுரைத் தொடர்கள் எந்த பத்திரிகையும் இதற்கு முன்னர் கையாண்டிராதது.

தலையங்கம் இல்லாத பத்திரிகை ஆன்மா இல்லாத உடல்போல என்று ஆசிரியர் சொல்லி இருக்கிறார். செய்திகளுக்குப் பின்புலத்தில் என்ன இருக்கிறது என்பது வாசகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே, பின்புலத்தில் நடக்கும் தகவல்களை தலையங்கமாக வெளியிட்டு வரும் தமிழ் இந்துவை பாராட்டுகிறேன்.

நேற்றைய தலையங்கத்தில், தமிழகத்தில் படைப்புக்கும் படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டிய இடம் துரதிருஷ்ட வசமாக சினிமாவுக்கும், அரசிய லுக்கும், கிரிக்கெட்டுக்கும் இருக்கிறது என்பதை குறிப்பிட் டிருந்தது முழுமையான உண்மை. படைப்புக்கும், படைப்பா ளிகளுக்கும் இருக்க வேண்டிய இடத்தை `தி இந்து’ கொண்டு சென்று சேர்க்கும் என நம்புகிறேன்.

காரணம், அரசியல், சினிமா, கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் வர்த்தகத்துக்காக ஒரு முழு பக்கத்தைக் கொடுத்து வருவதும், அதில் `பிசினஸ் லைன்’ கட்டுரைகளை தமிழாக்கம் செய்து கொடுப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகச் செய்தியை கொடுக்கும்போது வர்த்தகம் தொடர்பான தொழில்நுட்பச் சொற்களை கவனித்து வெளியி டுவது அவசியம்.

தொழில்நுட்பச் சொற்களை மொழிபெயர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தெரியாத மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றார்.

நிகழ்ச்சியில், பூர்ணிமா பாக்கியராஜ், ரூட்ஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், கோவை  ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் துறையியல் நிபுணர் டாக்டர் குகன், காட்மா தலைவர் ஆர்.ரவிக்குமார், கோப்மா தலைவர் மணிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை, `தி இந்து’ குழுமத்தின் மூத்த பொது மேலாளர் (நிர்வாகம்) பாலசுப்ரமணியன் தொகுத்து வழங்கினார். `தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைப் பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் ஏற்புரையாற்றினார்.

`தி இந்து’ தமிழுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, ராம்ராஜ் குழுமம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், மார்க் பர்னிச்சர்ஸ் ஆகியன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

‘முதல்’ வாசகர்களுக்கு கவுரவம்

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் `தி இந்து’ வாசகர் திருவிழா நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக வாசகர்கள் காலை 6.30 மணி முதல் வரத் தொடங்கினர்.

நிகழ்ச்சிக்கு முதலாவதாக வந்த காந்திமுருகன், சாகுல் அமீது ஆகிய இருவரும் முதல் வாசகர்களாகத் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

உளி இறங்குவது வலி என நினைத்தால் சிலையாக முடியாது - இயக்குநர் கே.பாக்கியராஜ்

நான் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருப்பதால் வாசகர்கள் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். சினிமா கதாசிரியராகவும் இருப்பதால் அனைவரது பேச்சையும் கேட்கும் ஆவல் உண்டு. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆசான். கண்டிப்பாக அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்பதுபோலத்தான் நான் அனைத்தையும் பார்க்கிறேன்.

உளி இறங்குவது வலி என நினைத்தால் சிலையாக முடியாது. அதுபோல விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் வேண்டும். எனக்கு சொந்த ஊர் கோவை தான். சலூன் கடைகளிலும், டீக்கடைகளிலுமே எனது பத்திரிகை படிக்கும் ஆர்வம் ஆரம்பமானது.

நிறைய படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்றார்கள். ஆனால் எனது குறுக்கு மூளை சிந்திக்கத் தொடங்கிய போது படித்த ஆசிரியர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு, படிப்பிற்கும் சம்பாதிப்பதற்கும், முன்னேறுவதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிந்தது. ஆனால், பள்ளியைவிட்டு நின்ற பிறகே படிப்பின் முக்கியத்துவம் தெரியவந்தது.

இப்போதும்கூட எனது வீட்டில் உள்ள அனைவருமே இந்து ஆங்கிலப் பத்திரிகையை படித்து வருகின்றனர். தினமும் காலையில் பேனாவை வைத்துக் கொண்டு, குறுக்கெழுத்துப் போட்டிகளை பூர்த்தி செய்து கொண்டு இருப்பர். ஆனால், நான் ஒருவன் மட்டுமே ஆங்கிலத்தில் படிக்க முடியாமல் அவஸ்தைபட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்போது ஆங்கிலத்தைப் படிக்காமல் விட்டதன் வருத்தம் தெரியும். ஆனால் தமிழில் இந்து நாளிதழ் வந்த பிறகு அந்த குறை நீங்கி விட்டது.

காலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன ஓட்டத்தில் இருப்பார்கள். ஆனால் அரை மணி நேரம் வாசிப்பு பழக்கம் வந்துவிட்டால், அனைத்து பழக்க வழக்கங்களும் மாறிவிடும். எனது உதவியாளர்கள் காலையில் பத்திரிகையை படித்துவிட்டு என்னை அழைத்து நடுப்பக்கங்களில், கருத்துப்பேழையில் வரும் விஷயங்கள் நமக்கு உதவியாக இருக்கும் எனப் படிக்கச் செல்வார்கள்.

பல நேரங்களில் பத்திரிகைகளில் வரும் செய்திகளே நமக்கு கதைகளைக் கொடுக்கும். நான் இன்றும், எனது உதவி இயக்குநர்களிடம் செய்திகளை தவறாமல் படிக்கச் சொல்வேன். தற்போது `மேட்ச் பிக்சிங்’கை வைத்து வெளிவந்திருக்கும் படம் கூட செய்திகளின் தாக்கம் தான். இந்து நாளிதழ் படிக்க ஆரம்பித்த பிறகு நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டு வருகிறேன்.

இந்து நாளிதழ் ஒவ்வொரு நாளும் ஒரு வார மலராக வெளிவருகிறது. விமர்சனங்கள் எழுதினால் அதற்கும் செவிசாய்க்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பாரபட்சம் இல்லாமல் இந்து தமிழ் நாளிதழ் வெளிவருகிறது. எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் என முக்கியமான தலைவர்களைப் பற்றிய புதிய செய்திகள் பல பாரபட்சமின்றி வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.

எல்லா விஷயத்தையும் ‘பாஸிட்டிவ்’ ஆக மாற்றுங்கள் - பாஸ்கி

நான் எப்போதும் எல்லா இடங்களிலும் ஒன்றை மட்டும் வலியுறுத்துவேன். அது என்னவென்றால், விமர்சனத்தை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குநர் பாக்கியராஜ், ஒவ்வொரு படத்திலும் 90 சதவீதம் வெற்றியைக் கொடுத்திருந்தாலும், 10 சதவீத விமர்சனம் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் .

அந்த விமர்சனத்தை எடுத்துக் கொண்டு அடுத்த படங்களில் திருத்திக் கொண்டதால்தான் தொடர்ந்து வெற்றியடைய முடிந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்த நேரத்தில் ஆங்கிலேயர்கள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் நமது நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த ராஜகோபாலச்சாரியை பார்த்து ஆங்கிலேயர் ஒருவர், “அமெரிக்கர்களை எடுத்துக் கொண்டால் அனைவரும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றனர்.

ஆப்பிரிக்கர்களை எடுத்துக் கொண்டால் அனைவரும் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர். ஆனால், இந்தியர்கள் மட்டும் ஏன் கருப்பு, வெள்ளை, மாநிறம் போன்ற பல்வேறு நிறங்களில் இருக்கின்றனர்” என கிண்டலடித்தார்.

அதற்கு, ராஜகோபாலச்சாரியார் பொறுமையாகத் தக்க பதிலடி கொடுத்தார். “மிஸ்டர் லார்ட், நான் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள், குதிரையை எடுத்துக் கொண்டால் கருப்பு, வெள்ளை என பல்வேறு நிறங்களில் இருக்கும். ஆனால்,கழுதையை எடுத்துக் கொண்டால் ஒரே நிறத்தில்தான் இருக்கும்” என்றார். கிண்டலடித்த ஆங்கிலேயர் வாயடைத்துப் போய்விட்டார். எனவே, எரிச்சலடையுமாறு நம்மிடம் யாரேனும் நடந்து கொண்டால் பதிலுக்கு கோபப்படாதீர்கள். அவர்களுக்கு, சாதகமான செயல்பாடுகள் மூலமாகப் பதிலடி கொடுங்கள்.

என்னைப் பார்த்து கிரிக்கெட் வராது என்றனர். ஆனால் நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். நடிப்பு வராது என்றார்கள். 15 படங்களில் நடத்துள்ளேன். ரேடியோ நிகழ்ச்சிகள் வராது என்றார்கள். 5 ஆயிரம் நிகழ்ச்சிகளை முடித்துள்ளேன். டி.வி. நிகழ்ச்சி வராது என்றார்கள். 6 ஆயிரம் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டேன்.

எனவே, யாராவது உங்களைப் பார்த்து தாழ்த்திப் பேசினால் அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவியுங்கள். அவர்கள்தான் நமக்கு தூண்டுகோல். எல்லா விஷயத்தையும் ‘பாஸிட்டிவ்’ ஆக மாற்றுங்கள். ஆனால், எச்.ஐ.வி.யை தவிர்த்து, என்றார் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x