49 பி பிரிவைப் பயன்படுத்தி எப்படி வாக்களிக்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம்

49 பி பிரிவைப் பயன்படுத்தி எப்படி வாக்களிக்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம்
Updated on
1 min read

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் விஜய், தேர்தலில் தான் வாக்கைச் செலுத்துவதற்காக இந்தியா வருவார். ஆனால், அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ‘49 பி’ பிரிவைப் பயன்படுத்தி, தன் வாக்குரிமையைப் பெறுவார் விஜய்.

பெரும்பாலானவர்களால் அறியப்படாத இந்த சட்டப் பிரிவு, ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு பரவலாகத் தெரியவந்தது. ‘நோட்டா’வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.

இந்நிலையில், விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘49 பி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தி எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த பிரச்சாரத்திலும் தமிழக தேர்தல் ஆணயம் இறங்கியுள்ளது.

இதுகுறித்து  தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில், ''உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரைப் பதிவிடவும்'' என்று தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in