Published : 14 Apr 2019 04:46 PM
Last Updated : 14 Apr 2019 04:46 PM

8 வழிச்சாலை திட்டம் முக்கியமானது; பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் பேச்சு

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் முக்கியமானது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.8 ஆம் தேதி சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அத்திட்டத்திற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலை திட்டம் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இப்பகுதியின் வளர்ச்சிக்கு அத்திட்டம் முக்கியமானதாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் தொடர் கவனம் செலுத்தி வருகிறார். விவசாயிகளுடன் இதுகுறித்து ஆலோசித்து, இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். அதன்பின் சேலம் - சென்னை திட்டம் குறித்த உங்களின் கனவு நிறைவேற்றப்படும்" என்று நிதின் கட்கரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x