Published : 23 Apr 2019 10:17 AM
Last Updated : 23 Apr 2019 10:17 AM
நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள், பெரம்பலூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அடையாளம் தெரியாத நபர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 506(1), தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் (பெண்களை மானபங்கப்படுத்துதல், பாலியல் வல்லுறவுக்கு கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்துதல், மிரட்டுதல், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுதல்) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், எழுத்துபூர்வமாக போலீஸாரிடம் புகார் அளித்த வழக்கறிஞர் அருளிடம் விசாரணை மேற்கொண்டு, உரிய ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.
மேலும், பெரம்பலூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மக்களவைத் தேர்தலின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட அறையில், பெண்கள் சிலரை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அந்த நட்சத்திர விடுதியில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நட்சத்திர விடுதியின் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், விடுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் வீடியோகிராபர் தலைமறைவாகி உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT