Published : 15 Apr 2019 11:50 AM
Last Updated : 15 Apr 2019 11:50 AM
இந்த வாரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் ட்விட்டர் பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், தமிழகத்தில் கோடைமழை காலத்துக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன. இது மகிழ்ச்சியான செய்தி. இந்த வாரத்தில் உள்மாவட்டங்களில் அதாவது கடற்கரையில் இருந்து தள்ளியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை தற்போது நிலவும் அதே 36, 36 டிகிரி வெப்பநிலையே இருக்கும்.
ஆனால், வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழையை பயங்கர மழை என்று கணிக்க முடியாது. ஆங்காங்கே பெய்யும்.
அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, திண்டுக்கள் உள்ளிட்ட மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்தப் பகுதிகளில் தொடர்ந்து 2,3 நாட்கள் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழைக்குக் காரணம் மேற்கில் உள்ள காற்றும் கிழக்கில் உள்ள காற்றும் மோதிக் கொள்வதும், இந்தியப் பெருங்கடலில் பூமத்திய பகுதியிலிருந்து நுழையும் காற்று ஏற்படுத்தும் தாக்கத்தாலும் இந்த மழை பெய்யவிருக்கிறது.
இவ்வாறு வெதர்மேன் கணித்துக் கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 18 தேதி தேர்தல் நடைபெறுவுள்ள நிலையில் உள்மாவட்டங்களில் பரவலாக மழைக்கான வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT