Last Updated : 11 Apr, 2019 11:00 AM

 

Published : 11 Apr 2019 11:00 AM
Last Updated : 11 Apr 2019 11:00 AM

கின்னஸ் சாதனையும்.. சேலம் திருநங்கையும்...

கடும் உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். வெற்றிச் சிகரத்தை அடைய எதுவுமே தடையாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை அர்ச்சனா. கின்னஸ் சாதனை புரிந்த குழுவில் இடம் பெற்றது மட்டுமின்றி,  பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இவர்.

சேலம் பழைய சூரமங்கலத்தில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வரும் அர்ச்சனா,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ‘தாய்’ திட்டத்தின் கீழ்  2007-ல் அழகுக்  கலை பயிற்சி முடித்துள்ளார். பாலின வேறுபாட்டால் எழும் கேலி, கிண்டல்களைத் தாண்டி, சக மனிதராக மற்றவர்கள் மதிக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட அர்ச்சனா, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதுவரை அவர் 42 பேருக்கு அழகுக் கலை பயிற்சி அளித்து, சிறந்த அழகுக்  கலை நிபுணர்களை உருவாக்கியுள்ளார். அரசியல், காவல் துறை, தொலைக்காட்சி,  சினிமா என பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள திருநங்கையர் பட்டியலில்,  இதுவரை 17 குறும்படங்கள் நடித்து, தனது கலைத் திறனை வெளிப்படுத்தியுள்ள அர்ச்சனாவும் இடம் பிடித்துள்ளார். அவரை சந்தித்தோம்.

“என்னை சமுதாயம் எவ்வாறு பார்க்கிறது  என்பதைக் காட்டிலும், நான் சமுதாயத்தால் எவ்வாறு பார்க்கப்படுகிறேன் என்பதே முக்கியம்.  மாறுபட்ட புதிய சிந்தனை,  நம்மை உயர்த்திக் கொள்ளவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டத் தேவையான யுக்தியாகவும் இருக்கும்.பெற்றோர் அம்மாசி-மாரியம்மாள். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர், ஒரு சகோதரி.  விடலைப் பருவத்தில் ஏற்பட்ட பருவ மாறுதலில், பெண்மை மீதான ஈர்ப்பை உணர்ந்த நிலையில் திருநங்கையாக மாறினேன். வழக்கம்போல  வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சக திருநங்கைகளின் பாலியல் ரீதியான அணுகுமுறையையும் வெறுத்தேன்.

உழைத்து சம்பாதிக்க விரும்பி, அழகுக் கலை பயிற்சி பெற்றேன். தொடர்ந்து, குறும்படங்களில் நடிப்பது,  சினிமா, நடனக்  குழுவில் பங்களிப்பு, பெண் சிசுக் கொலை, எய்ட்ஸ் நோய் ஒழிப்பு விழிப்புணர்வு என பல்வேறு தளங்களிலும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.  கிராமம் கிராமமாக சென்று சேவையில் ஈடுபடுவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சென்னை தியாகராயநகரில், திரைப்படக்  கலைஞர்களின் 60 மணி நேர கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் நடனமாடியதற்காக கின்னஸ் சாதனைப்  புத்தகத்தில் இடம் பிடித்தேன். கடந்த 2007-ல்  நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ போட்டியில், சிறந்த  நல்லொழுக்கத்துக்கான சிறப்பு பட்டத்தை வென்றேன்.  நீயா நானா,  ஜாக்பாட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன்.

சமுதாயத்திலிருந்து எங்களைப் புறந்தள்ளு வோருக்கு, ஓர் வேண்டுகோள். அர்த்தநாரீஸ்வரரைக் கையெடுத்து கும்பிடுகிறீர்கள். அதேபோல, இயற்கையிலேயே திருநங்கை அல்லது திருநம்பியாக மாறிய  எங்களுக்கு மனமுவந்து உதவவில்லை என்றாலும்கூட, தொந்தரவு செய்யாமல் வாழ வழிவிடுங்கள் என்பதே எங்களது கோரிக்கை” என்றார் அர்ச்சனா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x