Published : 10 Apr 2019 01:21 PM
Last Updated : 10 Apr 2019 01:21 PM
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு தன் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரையடுத்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையிலேயே கதிர்காமு முன் ஜாமீன் கோரியிருக்கிறார். கடந்த முறை டாக்டர் கதிர்காமு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ எடுத்து மிரட்டல்:
கதிர்காமு மீது புகார் கொடுத்த பெண், கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வீடியோ படம் எடுத்து அதை வைத்து தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டைப் பிரிக்கும் வேட்பாளர்:
பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் மயில்வேல் என்பவர் வேட்பாளராக இருக்கிறார். முதலில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின் கட்சிக்குள் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக மயில்வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மயில்வேல், ஓபிஎஸ் ஆதரவு பெற்றவர் எனத் தெரிகிறது.
இப்போதைக்கு இத்தொகுதி இடைத்தேர்தலில் திமுக - அதிமுகவுக்கே நேரடி போட்டி நிலவுகிறது. இருந்தாலும் அமமுக வேட்பாளர் அதிமுகவின் வாக்குகளை கணிசமாகப் பிரித்து திமுக வெற்றிக்கு மறைமுகமாக உதவலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அமமுக வேட்பாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாக அக்கட்சியினர் குமுறலைத் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT