Published : 02 Apr 2019 12:36 PM
Last Updated : 02 Apr 2019 12:36 PM

அதிமுகவிலிருந்து அதிருப்தியாளர்களை இழுக்க அமமுக முயற்சி- தேர்தலுக்கு பின் பதவி வழங்குவதாக ஆசை வார்த்தை

அதிமுகவில் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை இழுக்கும் முயற்சியில் அமமுக வினர்  ஈடுபட்டு  வருகின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவை அதிர்ஷ்ட கட்சி என்றே சொல்வார்கள். அந்த அளவுக்குச் சாதாரண தொண்டனும் திடீரென  எம்பி, எம்எல்ஏ ஆவ தோடு அமைச்சராகக்கூட ஆனதுண்டு.  பணம் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை அதிமுகவில் இல்லாமல் இருந்தது.

தற்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஓபிஎஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் தங்களது வாரிசுகளை களம் இறக்குகின்றனர். அதேபோல் முக்கிய நபர்களுக்கு மட்டுமே சீட் கிடைத்துள்ளது. திமுகவின் பார்முலாவையே  அதிமுகவும் கையில் எடுத்துள்ளதால், இனி சாதாரணத் தொண்டனுக்கு வாய்ப்புக் கிடைப்பது குதிரைக் கொம்புதான் என்ற நிலை உருவாகி உள்ளது.

ஜெயலலிதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் கட்சிப்பதவிகள் சாதாரண தொண்டனுக்குக் கூட கிடைத்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்  அமமுகவுக்கு சென்றோரின் பதவிகளுக்கு மட்டுமே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.  மற்றபடி, பெரிய அளவில் கட்சியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் கிளை, வார்டு செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையிலான பதவிகளுக்குப் போட்டியிட்ட பலர் என்ன செய்வதென்று தெரி யாமல் அதிருப்தியிலும்,  குழப்பத்திலும் உள்ளனர். அவர்களில் சிலர் தேர்தல் பணிகளைச் செய்யாமல் ஒதுங்கி உள்ளனர்.

அவ்வாறு அதிருப்தியிலும், குழப்பத்திலும் இருக்கும் அதிமுகவினரை அமமுகவினர் சந்தித்து வருகின்றனர். தேர்தல் முடிந்ததும் கட்சியில் முக்கியப் பதவிகளைப் பெற்று தருவதாகவும், அதிமுக டிடிவி. தினகரன் கைக்கு வந்துவிடும் எனவும் கூறி, அமமுகவினர் தங்களது கட்சிக்கு இழுக்க முயற்சித்து வருகின்றனர்.

அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவில் கட்சிப் பதவியோ, தேர்தலில் போட்டியிட சீட்டோ பெறுவதில் எந்த இடையூறும் இல்லை. அவரே நேரடியாக நேர்காணல் நடத்தி சீட் கொடுப்பார். ஆனால், தற்போது முக்கியத் தலைவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சீட் கிடைக்கும் நிலை உள்ளது. அதேநிலைதான், கட்சிப் பதவியிலும் உள்ளது. ஆனால், அமமுகவில் சாதாரணமாக இருந்தோருக்குக்கூட முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் சீட் கொடுத்ததும் அப்படித்தான். ஜெயலலிதாபோல்தான் டிடிவி தினகரன் கட்சியை நடத்தி வருகிறார். இதனால் அதிமுகவில் இருக்கும் பலர் எங்கள் கட்சிக்கு வரத் தயாராக உள்ளனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கட்சிக்கு வருவோருக்கு தேர்தலுக்குப் பிறகு புதிய பதவிகள் வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x