Published : 25 Apr 2019 04:46 PM
Last Updated : 25 Apr 2019 04:46 PM

ரெட் அலர்ட் இல்லை பயம் வேண்டாம்; 1500 கி.மீ தொலைவில் உள்ளது அடுத்தடுத்த நகர்வை பொறுத்தே கணிக்கமுடியும்: வானிலை ஆய்வு மையம்

ரெட் அலர்ட் விடப்படவில்லை, தேவையற்ற பயம் வேண்டாம். 1500 கி.மீ.தொலைவில் தாழ்வுப்பகுதி உள்ளது. அதன் அடுதடுத்த நகர்வை வைத்தே எதுவும் சொல்லமுடியும், அனுமானங்களை கூற முடியாது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தற்பொழுது இது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

ஏப். 27, 28 தேதிகளில் இது புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் 25. 26 தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 27, 28 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

கடலோர மாவட்டங்களில் கனமழை என்கிறார்களே?

 

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெற்று நகர்வதை பொறுத்து அவ்வப்போது அறிவிக்கப்படும். அது புயலாக மாறிய பிறகுதான் எதுவும் சொல்ல முடியும். மழை, காற்று குறித்த விவரம் அடுத்து வரும் காலங்களில் கூறப்படும்.

 

28, 29, 30 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே இப்போதைய நிலையை வைத்து எதையும் உறுதியாக கூற முடியாது. அடுத்து வரும் நாட்களில் கூறுவோம். தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவாகி புயலாக மாறியபின்னர் அதன் நிலை குறித்து அடுத்து வரும் நிலையில் கூறுவோம்.

 

இப்போதைக்கு 1500 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கிட்டத்தட்ட 85 டிகிரி கிழக்கில் உள்ளது. அது நகர்வது வலுப்பெறுவதை வைத்தே அடுத்தடுத்த நிகழ்வுகளை கூறுவோம். ரெட் அலர்ட் எதுவும் விடப்படவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x