Published : 15 Apr 2019 12:00 AM
Last Updated : 15 Apr 2019 12:00 AM

வேலூர் மக்களவை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற திமுக, அதிமுக தீவிர பிரச்சாரம்

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் களம், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக பொருளாளர் துரைமுருகன் இடையே நடைபெறும் யுத்த மாக மாறியுள்ளது. இரண்டு தொகுதிக்கான இடைத் தேர் தலும் நடைபெறுவதால் சிறு பான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது.

தமிழக அளவில் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருந்த வேலூர் தொகுதி இன்று அனைவராலும் கவனிக்கக்கூடிய தாக மாறியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனையைக் காரணம் காட்டி, திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் திமுகவினர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர்.

ஏ.சி.சண்முகம் (அதிமுக), கதிர்ஆனந்த் (திமுக), பாண்டு ரங்கன் (அமமுக), தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி), சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்) என மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2014 தேர்தலில் பாஜக வில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 3,24,326 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகள் பெற்றார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட் பாளர் அப்துல் ரஹ்மான் 2,05,896 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

இந்தமுறை அதிமுக கூட்டணி யில் இடம் பெற்ற புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் இந்த முறை குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்ற முழக்கத்துடன் ஏ.சி.சண்முகம், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதியில் மட்டும் 64,373 வாக்குகள் பெற்றுள்ளது. ஏ.சி.சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கு, சமூக வாக்குகள், கூட்டணி கட்சியின் வாக்குகளுடன் வெற்றி சுலபம் என்ற கணக்கில் உள்ளனர். ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக சின்னத்திரை நட்சத் திரங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுகவில் கதிர்ஆனந்த், வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாகவே தனது மகனுக்காக வாக்குகளை சேகரிக்கும் பணியை துரைமுருகன் வேகப்படுத்தினார். கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். வேட்பாளர் அறிவிப்புக்கு ஒரு நாள் முன்கூட்டியே பிரச்சாரத்தை கதிர் ஆனந்த் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கட்சிக்குள் உள்ளடி வேலைகள் இருந்தாலும் துரை முருகன் வீட்டில் நடந்த வரு மானவரி சோதனைக்குப் பிறகு திமுக வினரின் பிரச்சார வேகம் அதிகரித்துள்ளது.

தொகுதியில் ஏறக்குறைய 3.25 லட்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுகவினர் தீவிரமாக களப் பணி ஆற்றி வருகின்றனர். கதிர்ஆனந்துக்காக அவரது மனைவி சங்கீதா, திமுக மகளிர் அணியினருடன் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பாண்டுரங்கன், என் வழி தனி வழி என்ற கணக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வேலூர் மக்களவை தொகுதி யில் வெற்றியை சுலபமாக யாராலும் தட்டிப் பறிக்க முடியாது; யாரும் விட்டுக் கொடுக்க வும் தயாராக இல்லை என்ற நிலையே இருக்கிறது. அதிமுக, திமுக என இரண்டு தரப்பு தகவல் தொழில் நுட்ப அணியினரும் தனியாக யுத்தமே நடத்தி வருகின்றனர்.

சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக இரண்டு தரப்பினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x