Last Updated : 22 Sep, 2014 11:22 AM

 

Published : 22 Sep 2014 11:22 AM
Last Updated : 22 Sep 2014 11:22 AM

தலைமைச் செயலக கட்டிடத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் சாம்பல்

சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் நேற்று காலை தீப்பிடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்தன.

சென்னை தலைமைச் செயலக பிரதான கட்டிடத்தின் முதல் தளத்தில் பணியாளர் சீர்திருத்த துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 8.45 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் சிலர் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலக வளாகத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். வேப்பேரி, திருவல்லிக்கேணி, எஸ்பிளனேடு, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

காலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லை. தீயை அணைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஒவ் வொருவராக வர ஆரம்பித்தனர்.

இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணினிகள், மேஜைகள் எரிந்து நாசமாயின.

கோட்டை போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ பிடித்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தீவிபத்தால் தலைமைச் செயலக வளாகம் 2 மணி நேரம் பரபரப்பாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x