

சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 870 கி.மீ தூரத்தில் நிலைக்கொண்டுள்ள ஃபானி புயல் மே.1-ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் ஆந்திரா கடற்கரை அருகில் 300 கிலோமீட்டர் தொலைவு வரை வந்து நகர்ந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
ஃபானி புயல் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 870 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து தீவிர புயலாகவும் நாளை அதிதீவிர புயலாகவும் தீவிரமடையக்கூடும்.
மே1-ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் ஆந்திரா கடற்கரை அருகில் 300 கிலோமீட்டர் தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக் கூடும்.
மழை பொறுத்தவரையில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றை பொறுத்தவரையில் வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ.வேகத்திலும் காற்று வீசக்கூடும். மாலையில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் சில சமயங்களில் 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
ஏப்ரல் 30 மற்றும் மே1 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்கரைக்கு உடனடியாக திரும்ப கேட்டு கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.