Last Updated : 11 Apr, 2019 03:14 PM

 

Published : 11 Apr 2019 03:14 PM
Last Updated : 11 Apr 2019 03:14 PM

பிரச்சாரத்தில் குஷ்புவிடம் சேட்டை: தொண்டருக்கு பளார்

தன் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார் குஷ்பு. தற்போது அண்ணனுக்கு உடல்நிலை கொஞ்சம் தேறியவுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.

முதலில் தேனி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார் குஷ்பு. அதனைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

உடனடியாக சம்பந்தப்பட்ட நபரைக் கன்னத்தில் அறைந்தார் குஷ்பு. அருகில் இருந்தவர்களும், போலீஸாரும் உடனடியாக அந்த நபரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.

இதனை ட்விட்டர்வாசி ஒருவர் பகிர்ந்து, ''காங்கிரஸ் கட்சிக்காகப் பணிபுரிபவர்கள் மற்றும் தலைவர்களின் நிஜமுகம்'' என்று குஷ்புவைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

இக்கருத்துக்குப் பதிலடியாக, "நிஜமா? அப்படியென்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள், சில மோசமான ஆண்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அமைதியாக பொறுத்துப் போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?

ஒரு பெண் உங்களைப் போன்ற ஒருவரை வளர்த்தெடுத்திருப்பது வெட்கக் கேடு. என் அம்மா எனக்கு தைரியமாக இருக்கக் கற்றுத் தந்திருக்கிறார். நான் அதைப் பின்பற்றுகிறேன். அகில இந்திய காங்கிரஸ் அப்படியான பெண்களை நினைத்துப் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.

மேலும், இந்த வீடியோ தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு எதிர் கருத்துகள் கூறும் அனைவரையும் தொடர்ச்சியாக சாடி வருகிறார் குஷ்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x