Last Updated : 11 Apr, 2019 10:59 AM

 

Published : 11 Apr 2019 10:59 AM
Last Updated : 11 Apr 2019 10:59 AM

நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்கள்

சட்டங்களும், விதிகளும் மக்களின் நன்மைக்காகவே விதிக்கப் படுகின்றன. இதை அறியாமல், அரசு விதிக்கும் சட்டங்கள், விதிகளை மீறுவதை சிலர் முழுநேர செயல்பாடாகவே கொண்டிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது வாகன நெம்பர் பிளேடுகளில் செய்யப்படும் விதிமீறல்கள். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை கடும் நடவடிக்கை மேற்கொண்டு, ஆர்வக் கோளாறுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.

அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்துத்துறையால் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு வாகனத்துக்கும் பிரத்யேக பதிவெண் வழங்கப்படுகிறது. வாகனத்தின் முன்னும், பின்னும் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண் மூலம், வாகனம் திருடுபோனாலோ, விபத்து காலத்திலோ அடையாளம் காண முடிகிறது.வாகனத்தின் பதிவு எண்ணுக்கு முன்னால், வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் பெயரும், அந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக எண்ணும் குறிப்பிடப்படுகிறது.

உதாரணமாக, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டால், ‘டிஎன்’ என்றும், கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்றால் ‘66’ என்றும் எழுதுகிறோம்.

ஆனால், சில இளைஞர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பதிவு எண்கள் விதிமுறைகளின்படி சரியாக எழுதப்படுவது இல்லை.

சிலர், 8055 என்ற பதிவு எண்ணை ‘BOSS’ எனவும், 4667 என்பதை ‘அம்மா’ எனவும், 5181 என்பதை ‘SIBI’ என்றும், 9061 என்பதை ‘GOBI’ என்றும் எழுதி வருகின்றனர். மேலும் பலர், தங்களது  வாகன நம்பர் பிளேட்டுகளில், தங்களுக்குப்  பிடித்த தலைவர்கள், நடிகர்களின் படங்கள், பெயர்கள்,  குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், வாசகங்கள், கருத்துகள் என, வாகனப் பதிவு எண்களை படித்தறிய முடியாத அளவுக்கு ‘ஸ்டைலான’ வடிவத்திலும், வண்ணத்திலும் மாற்றி எழுதி வைக்கின்றனர். இறுதியில், சிறிய அளவில் கடமைக்காக வாகனப் பதிவு எண்ணை எழுதுகின்றனர்.

இதனால், அந்த வாகனம் விபத்துக்கு உள்ளானாலோ அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாலோ, உடனடியாக அந்த வாகனத்தின் பதிவு எண்ணைத்  தெரிந்துகொள்ள முடியாத நிலை உருவாகிறது. இதனால், குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பிச் செல்லவும் வழி ஏற்படுகிறது. எனவே, போலீஸாரும், போக்குவரத்து துறையும் இணைந்து, விதிகளை மீறி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடன் வலம் வரும் வாகனங்களைக் கண்டறிந்து, உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்டபோது, “1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51-ன்படி,  அனைத்து வாகனங்களிலும் ‘நம்பர் பிளேட்’ பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதில், பதிவெண் தவிர எந்தவிதமான பெயர்களோ, வாசகங்களோ இருக்கக்கூடாது. தங்கள் விருப்பம்போல எழுதப்படும் ‘ஃபேன்சி’ எழுத்துகளுக்கும் அனுமதி இல்லை.

மோட்டார் வாகன விதிமுறைப்படி, இருசக்கர வாகனத்துக்கு முன்புற நம்பர் பிளேட்டில் எழுத்து மற்றும் எண்கள் 30 மில்லிமீட்டர் உயரம், 5 மி.மீ. தடிமனுடன்,5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.

பின்புறம், எழுத்தும், எண்களும் 40 மி.மீ. உயரம், 7 மி.மீ.  தடிமனுடன், 5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.

கார் மற்றும் 4 சக்கர வாகனங்களின் முன், பின்புறங்களில் எழுத்து மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரம், 10 மி.மீ. தடிமனுடன், 10 மி.மீ.  இடைவெளியில் இருக்க வேண்டும்.

வாடகை வாகனங்களில் மஞ்சள் பின்புலத்தில், கருப்பு நிறத்தில் பதிவெண்கள் எழுதப்பட வேண்டும். சொந்த வாகனங்களில் வெள்ளை பின்புலத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துகள் இருக்க வேண்டும். பதிவெண்கள், வாசிக்க சிரமமில்லாத எழுத்துகளில் இருக்க வேண்டும்.

அபராதம் எவ்வளவு?

‘நம்பர் பிளேட்’ விதிமீறல்கள் தொடர்பாக போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மட்டுமின்றி, போலீஸாரும் அபராதம் விதிக்கின்றனர். மத்திய மோட்டார் வாகன விதிப்படி, முதன்முறை விதிமீறலுக்கு ரூ.100-ம், அடுத்தமுறை ரூ.300-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது. ஆபத்தான நேரங்களில் வாகன எண்தான் வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக அமையும் என்பதால், வாகன பதிவெண்ணின் முக்கியத்துவத்தை வாகன உரிமையாளர்கள் உணர வேண்டும்” என்றனர்.

`அபராதம் குறைவு, சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறைச்  சிக்கல்கள் ஆகியவற்றை களைய வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதமாக விதிக்க வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த விதிமீறல்களை குறைக்க முடியும்` என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உயர் பாதுகாப்பு ‘நம்பர் பிளேட்’

“வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வாகன பதிவெண் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதுவரை நம்பர் பிளேட்டையும், அதில் எழுத்துகளின் வடிவத்தையும் வாகன உரிமையாளர்கள் தங்கள் விருப்பம்போல  தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

இதைத் தடுக்க, வரும் நாட்களில் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டுகளை அளிக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அந்த திட்டம் அமலாகும்போது, நம்பர் பிளேட்டுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்தான் பெற முடியும். அப்போது விதிமீறல்கள் முழுமையாக தவிர்க்கப்படும்” என்றனர் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.

புகார் தெரிவிக்க பிரத்யேக செயலி...

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஆட்டோவில் அதிக நபர்களை ஏற்றிச் செல்லுதல், சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க, கோவை மாநகர காவல் துறையால் `போலீஸ் இ ஐ (Police-E-Eye)’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை `கூகுள் பிளே ஸ்டோரில்’  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த செயலி மூலம் விதிமீறல் வாகனத்தின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்து,  பொதுமக்களே காவல் துறைக்கு புகார் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செயலியில் `Improper Number Plate’ என்பதை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

புகைப்படம் கிடைத்தவுடன் வாகன பதிவெண் மூலம் அதன் உரிமையாளரை கண்டறிந்து, விதிமீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும். அபராதத் தொகை செலுத்த மறுத்தால்,  சம்மந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதம் செலுத்த நேரிடும்” என்றார் கோவை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் (மேற்கு) ராஜ் கண்ணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x