Last Updated : 25 Apr, 2019 02:39 PM

 

Published : 25 Apr 2019 02:39 PM
Last Updated : 25 Apr 2019 02:39 PM

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்றவர் கைது: இணையத்தில் வைரலாகும் உறையவைக்கும் வீடியோ

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் முதற்கட்ட விசாரணையில் லிஃப்ட் கொடுக்காததால் சாலையில் கல்லை வைத்து இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வேகமாக சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. போக்குவரத்து காவல்துறையின் அந்த சிசிடிவி காட்சியில் சாலையில் ஒரு நபர் கற்களை வீசி விபத்தை ஏற்படுத்துவது, விபத்தில் சிக்கிய நபருக்கு தண்ணீர் கூட கொடுக்கவிடாமல் வாகன ஓட்டிகளை விரட்டுவதும் பதிவாகியுள்ளது. விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட போலீஸார் சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

மதுரை திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (55). இவர், மருத்துவ ஆய்வுக்கூடத்தில் தொழிக்நுட்ப பணியாளராக இருந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முகேஷ் கண்ணா பிளஸ்2 முடித்துள்ளார். 2-வது நபர் 5-ம் வகுப்பு படிக்கிறார். 

ஏப்., 23ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு அவர் தனது வேலையை முடித்துவிட்டு, பைக்கில் சென்ற போது, திருநகர் ஜிஎஸ்டி ரோட்டில் பைக்கில் இருந்து விழுந்து உயிருக்கு போராடினார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

விபத்து என்று வழக்கு பதியப்பட்ட நிலையில் உறவினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மேலும் விசாரித்தனர்.

அப்போது பாஸ்கரனின் செல்போன், பேக் திருடுபோனது தெரியவந்தது. இது அவரது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

செயற்கையாக விபத்து ஏற்படுத்தி  கொலை செய்து இருக்கலாம். முழுமையாக விசாரிக்க வேண்டும் என, போலீஸாருக்கு பாஸ்கரின் மனைவி யின் சகோதரியான தாசில்தார் பிரியா அழுத்தம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சாலையின் நடுவே திடீரென ஒருவர், கல்லை வீசி, விபத்து ஏற்படுத்தி பாஸ்கரனின் செல்போன், பேக்கை திருடிச் சென்றதும், அதன்பின் அவ்வழியாக சென்றவர்கள் பாஸ்கரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதும் சிசிடிவி கேமராவில் தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, ரோட்டில் கல்லைப் போட்டு விபத்து ஏற்படுத்திய நபர் சிக்கினர். அவரது பெயர் ராஜா (38). தனக்கன்குளம் பர்மா காலனியைச் சேர்ந்தவர். கார்பென்ட்டராக பணிபுரிகிறார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

லிஃப்ட் கொடுக்காததற்கு கொலையா?

போலீஸார் கூறுகையில், சம்பவத்தன்று ராஜா குடிபோதையில் இருந்தார். விபத்து நடந்த இடத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு  லிப்ட் கேட்டுள்ளார். யாரும் அவரை ஏற்றிச் செல்லவில்லை. இதனால் ஆத்திரத்தில்  முதலில் ரோட்டோரத்தில் கிடந்த கற்களை எடுத்து ரோட்டின் நடுவில் அடுக்கி வைத்துள்ளார். அவ்வழியாக சென்ற லாரி ஓட்டுநர் அவரை கண்டித்துவிட்டு சென்றார். இதன்பின் ஒரு கல்லை மட்டும் ரோட்டின் குறுக்கே போட்டுவிட்டு, சாலையோரத்தில் போதையில் படுத்துக்கிடந்துள்ளார்.  பாஸ்கரன் பைக்கில் சென்றபோது, கல்மீது மோதி கீழே விழுந்து மயங்கினார். அப்போது அவரது பேண்ட், சட்டை பையில் இருந்த செல்போன் பேக்கை திருடிக் கொண்டு ராஜக  தப்பியது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்தது. ராஜா வீட்டுக்கு சென்ற ஆட்டோ அடையாளம் கண்டு அவரது வீட்டுக்கு சென்றோம். அங்கு பாஸ்கரனின் செல்போன், பேக் இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தோம் என்றார். 

ஆனால், இது வெறும் லிஃப்டுக்காக செய்த கொலை போல் இல்லை என்று பரவலாக கருத்து எழுந்து வருகிறது. கொலையாளி எந்த சலனமும் இல்லாமல் செல்ஃபோனை எடுப்பதும், கைப்பையை திருடி மறைத்து வைப்பதும் அவர் குற்றப் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என்றே உணர்த்துகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில் இரவுப் பணி முடித்து வீடு திரும்பும் சாமானியர்களுக்கு மிகப் பெரிய அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. கொலை செய்த நபர் சைக்கோ போல் செயல்பட்டதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் இரவு ரோந்துப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடுமையான தண்டனை வழங்கவேண்டும்..

பாஸ்கரன் மகன் முகேஷ்கண்ணா கூறுகையில், பிளஸ்2 தேர்ச்சி பெற்றபோது, சந்தோஷம் அடைந்தார். எனக்கு ட்ரீட் வைத்தார். என்னை மருத்துவம் படிக்க, வைக்க முயற்சித்தார். எனது மருத்துவக்கனவு தகர்ந்தது.

எனது தந்தையின் வருமானமே குடும்பத்தை நடத்தியது. ஆசிரியர் பயிற்சி முடித்த  என்னுடைய தாயாருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. எனது பெரியம்மாவே எங்களது அம்மாவுக்கு திருமணம் நடத்தி வைத்து இருக்கிறார். இனிமேல் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியவில்லை. 

கல்லைப்போட்டு எனது தந்தையை கொலை செய்தவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இதே போன்று வேறு நபர்களையும் கொன்றிருக்கிறாரா எனவும் போலீஸார் விசாரிக்கவேண்டும், என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x