Published : 23 Apr 2019 01:44 PM
Last Updated : 23 Apr 2019 01:44 PM
தமிழகத்தை நோக்கி வரும் 29-ம் தேதி புயல் வர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வரும் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதுமேலும் வலுவடைந்து வரும் 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதனைத் தொடர்ந்து 27, 28 தேதிகளில் மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து 29-ம் தேதி புயலாக மாறும்.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 29-ம் தேதியிலிருந்து இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பதிவாகி உள்ளது...
அதிகபட்சமாக ஆத்தூர் சேலம் மாவட்டம் 10 செ.மீ., பெரியகுளம் தேனி மாவட்டம் 6 செ.மீ., சங்கரிதுர்க்கம் சேலம் மாவட்டம் ஆறு செ. மீ., திருவண்ணாமலை 5 செ.மீ.,ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது...
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
புயல் எதை நோக்கி வருகிறது?
தமிழக கடற்கரை நோக்கி வருகிறது. சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும். இப்போதைக்கு சரியாகச் சொல்ல முடியாது. அது வலுவடைந்து அருகில் வரும்போது துல்லியமாக தெரிவிக்கிறோம்.
எங்கெங்கு மழை இருக்கும்?
கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும். இது புயலாகத்தான் வருகிறது. பெரும் புயலாக இருக்காது. புயல் நேரத்தில் சென்னைக்கு கண்டிப்பாக மழை இருக்கும்.
மே மாதத்தில் இதுபோன்று புயல் வந்ததுண்டா?
வந்ததுண்டு. ஏற்கெனவே முன்னுதாரணம் இருக்கிறது. தற்போது கூறியுள்ளது அனுமானம் தான். உருவான பின்னர் அதன் நகர்வு இப்படி இருக்கும் என்றுதான் கூறுகிறோம்.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT