Published : 25 Sep 2014 02:48 PM
Last Updated : 25 Sep 2014 02:48 PM

தொலைந்துபோன பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

தொலைந்துபோன இரு சக்கர வாகனங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள சென்னை, கோயம்பேடு காவல்துறை “Missing two-wheelers" என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நிறுத்தத்தில் உரிமை கோரப்படாத 200 இரு சக்கர வாகனங்களும், கோயம்பேடு காவல் நிலையம் அருகே மேலும் 120 இரு சக்கர வாகனங்களும் உரிமை கோரப்படாமல் உள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக திருடப்படும் இரு சக்கர வாகனங்கள் பல கோயம்பேடு பஸ் நிலைய வாகன நிறுத்தத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் அப்படியே விட்டுச் செல்லப்படுகின்றன.

இந்த வாகனங்களால் தினசரி வண்டியை நிறுத்த வருபவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படுவதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் வேண்டுமென்றே வாகனத்தை இது போன்ற இடங்களில் வைத்து விட்டு, காணாமல் போனதாக பொய் புகார் அளித்து காப்பீடுத் தொகையை கோர முயல்கின்றனர்.

இதுபோன்று திருடப்பட்டு, கைவிடப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் மீண்டும் பெறும் வண்ணம் 17 வண்டிகளின் புகைப்படங்களுடன் முதற்கட்டமாக > "missing two-wheeleers" ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியுள்ளனர் கோயம்பேடு காவல்துறையினர்.

விரைவில் அனைத்து இருசக்கர வாகனங்களின் புகைப்படங்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிடப்போவதாக கோயம்பேடு காவல்துறையின் உதவி ஆணையர் ஏ.டி.மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து முனையத்தில் 3 அடுக்கு வாகன நிறுத்த வசதி உள்ளது. இங்கு சுமார் 200 இருசக்கர வாகனங்கள் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 120 வாகனங்கள் கோயம்ப்பேடு காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

“போக்குவரத்துத் துறை உதவியுடன் இந்த வாகனங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது எனவே சமூக வலைத்தளம் மூலம் இதனைச் செய்ய முடிவெடுத்தோம்” என்றார் உதவி ஆணையர் மோகன்ராஜ்.

இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வண்டியைத் தொலைத்தவர்கள் தங்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன் வாகனப் புகைப்படத்தையும் வெளியிடலாம்.

கோயம்பேடு காவல்துறையினரின் இந்த புதிய முயற்சியை அடுத்து அரசு ரயில்வே போலீஸ் துறையினரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிமை கோரப்படாமல் இருக்கும் வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க சமூக வலைத்தளம் தொடங்கும் யோசனைக்கு முன்வந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் சுமார் 100 வாகனங்கள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோயம்பேடு காவல்துறை தொங்கியுள்ள ஃபேஸ்புக் பக்கம்:> “Missing two-wheelers"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x