வாயால் அடை சுடும் பொன் ராதாகிருஷ்ணன்; விருது வழங்கவேண்டும்: ஸ்டாலின் கிண்டல்
வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன் என்று கூறிய மோடியும் அவர் சிஷ்யர் பொன் ராதாகிருஷ்ணனும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது:
“பிரதமராக இன்றைக்கு இருக்கும் மோடி கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த நேரத்தில் மக்களை சந்தித்த பொழுது நான் பிரதமராக வந்தால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வானத்தை கிழிப்பேன் வைகுண்டத்தை காட்டுவேன், மணலைக் கயிறாகத் திரிப்பேன் என்ற நிலையில் அளவுக்கதிகமான வாக்குறுதிகளை, நினைத்தே பார்க்க முடியாத வாக்குறுதிகளை, வழங்கினார்.
இதே கன்னியாகுமரிக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தல் நேரத்தில் மோடி வந்தார். அவர் அப்பொழுது கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அளித்த உறுதிமொழி, வாக்குறுதி என்னவென்றால், நான் பிரதமராக வந்தால், இந்த கன்னியாகுமரியை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என்றார். மாற்றியிருக்கின்றாரா?
இலங்கை கடற்படையால் ஒரு மீனவர் கூட சாக மாட்டார்கள் என்றார். 5 ஆண்டு காலமாக எத்தனை மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள்? . இலங்கை கடற்படையால் ஒரு மீனவர்கள் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என்றார். கைதுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் நூற்றுக்கணக்கானோர் இலங்கை சிறையில் அடைபட்டிருக்கின்றார்கள்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்னை இருந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் குஜராத்தில் இருக்கக்கூடிய மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையால் பல பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கின்றது, இந்த இரண்டு மாநில பிரச்னைகளையும் தீர்த்து வைக்க இதற்கென்று கண்காணிப்புக் குழு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த போகின்றேன் என்று பிரதமர் சொல்லி ஐந்து வருடம் ஆகிவிட்டது.
இது வரையில் அது அமைக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது அமைப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றாரா? எதுவும் உருவாகவில்லை. எனவே, வாயில் வடை சுடுவதில் மோடி வல்லவர். இதுபோன்ற அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வாரி வாரி வழங்குவார்.
இங்கு நிற்கும் பாஜக வேட்பாளர் மோடியின் சிஷ்யனாக, மோடியின் வேட்பாளராக, வாயில் வடை சுடக்கூடிய மோடியின் வேட்பாளராக நிற்கின்றார். அவரும் கடந்த தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினார். நான் இரண்டு நாட்களாக உட்கார்ந்து பட்டியல் எடுத்தேன்.
கன்னியாகுமரிக்கு செல்கின்றோம். என்ன சொல்லி இருக்கின்றார் என்ன செய்திருக்கின்றார். அதை மக்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று பட்டியல் எடுத்தேன். அதில் 63 உறுதி மொழிகள் கொடுத்திருக்கின்றார். மோடி வாயில் வடை சுடுகிறார். பொன் ராதாகிருஷ்ணன் அடை சுடுகின்றார்.
கடந்த தேர்தல் நேரத்தில் அதிலும் குறிப்பாக, குமரியில் ஸ்மார்ட் சிட்டி கொண்டு வருவேன் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். கொண்டு வந்தாரா? தொழில்நுட்ப பூங்கா அமைப்பேன் என்றார். அமைத்திருக்கின்றாரா? சித்த மருத்துவமனை கழகத்தை கொண்டு வருவேன் என்றார். அமைத்து விட்டாரா? விவசாய கல்லூரியை உருவாக்கி தருவேன் என்றார். உருவாக்கி விட்டாரா?
புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா? ரப்பர் பூங்கா அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா? கன்னியாகுமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா? மலர் சாகுபடியை ஊக்குவிப்பேன் என்று சொன்னார். செய்திருக்கின்றாரா?
காய்கறி கிடங்கு அமைப்பேன் என்றார். அமைத்திருக்கின்றாரா? மீன் சேமிப்பு கிடங்கு அமைப்பேன் என்று சொன்னார், செய்தாரா? நாகர்கோவிலைச் சுற்றி சுற்றுச் சாலை அமைப்பேன் எனச் சொன்னார் செய்தாரா? மீனவர்களுக்கு நவீன வசதிகளோடு தொலைத்தொடர்பு பெற்றுத்தருவேன் என்றார், செய்திருக்கிறாரா? காணாமல் போகக்கூடிய மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக ரேடார் வசதியோடு ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா?
இன்னும் நிறைய இருக்கின்றது. சொல்லுவதற்கு வாய் வலிக்கிறது. அவ்வளவு இருக்கின்றது. அதனால்தான் சொன்னேன் மோடி வாயில் வடை சுட்டிருக்கின்றார். பொன் ராதாகிருஷ்ணன் வாயில் அடை சுட்டிருக்கின்றார் என்று சொன்னேன் இதே பொன்னார் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஏன் மத்தியில் அமைச்சராகவும் இருந்து பணியாற்றி வருகின்றார்.
இத்தனை பொறுப்புக்கள் இருந்தும் இவ்வளவு உறுதிமொழிகள் தந்தும் அதை காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டது உண்டா? கிடையாது. விருது வாங்குவதில் நம் எடப்பாடி மிகவும் எக்ஸ்பர்ட். அதற்கெல்லாம் ஆள் செட்டப் செய்து விருது வாங்கி விடுவார்.
அதற்காக நான் இப்பொழுது ஒரு சிபாரிசு செய்யப் போகின்றேன். பொன் ராதாகிருஷ்ணன், இவ்வளவு உறுதிமொழி கொடுத்து இருக்கின்றார் வாயில் அடை சுட்டிருக்கின்றார் அவருக்கு ஒரு விருது வாங்கிக் கொடுங்கள் என்று நான் ரெக்கமெண்ட் செய்கின்றேன்.
இதே பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு எவ்வளவோ கொடுமைகளை, எவ்வளவோ அக்கிரமங்களை இந்தியா சந்தித்துக் கொண்டு இருப்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்திற்கு ஒக்கி புயலை மறந்திட முடியுமா? நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது, மத்திய அரசு வந்ததா? மாநில அரசு நடவடிக்கை எடுத்ததா? கடற்படையும் வரவில்லை, கடலோர காவல்படையும் வரவில்லை.
மீனவர்கள் யாரை நம்பி இன்றைக்கு வாழக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள்? அதனால்தான் சொல்கின்றோம். மத்திய அரசு மாற வேண்டும், பிரதமர் உடனடியாக வீட்டிற்கு போக வேண்டும். அவர் வீட்டிற்கு செல்லுகின்ற நேரத்தில் மத்தியில் நாம் எதிர்பார்க்கின்ற ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்”
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
