Published : 28 Apr 2019 11:55 AM
Last Updated : 28 Apr 2019 11:55 AM

7-ம் வகுப்பு மாணவியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை: பாலியல் பலாத்காரமா? -12ம் வகுப்பு மாணவர் கைது -திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் 7-ம் வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவர் பலாத்காரம் செய்து மின்சாரத்தைப் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்புப் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 16ம் தேதி கூலி வேலை செய்யும் தந்தையும் தாயும் விட்டை விட்டு கிளம்பிவிட கோடை விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்துள்ளார் மாணவி.

 

வேலைக்குச் சென்று திரும்பிய தந்தையும் தாயும் தன் மகள் வாயில் மின்சார ஒயருடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் கதறிய சப்தம் கேட்டு அக்கம்பக்கதில் உள்ளவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியும் வேதனையும் அடைய அந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

இறந்து கிடந்த சிறுமியின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தெரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் கோபாவேசமடைந்து சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வடமதுரை போலீஸார், சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிறகு தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர்.

 

இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் மாணவர் மாணவியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மின்சாரம் பாய்ச்சி சிறுமியைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x