Last Updated : 04 Apr, 2019 12:09 PM

 

Published : 04 Apr 2019 12:09 PM
Last Updated : 04 Apr 2019 12:09 PM

‘கட்சியும் வேண்டாம்... ஒரு கொடியும் வேண்டாம்’ எங்கள் பிரச்சினையை தீர்ப்போருக்கு மட்டுமே வாக்களிப்போம்: போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முடிவு

போக்குவரத்துக் கழகங்களில் தொழி லாளர்களுக்கான பிரச்சினைகள் பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாமல் உள்ளன. தொழிற்சங்கங்கள் இதுவரை தாங்கள் சார்ந்த கட்சிக்கு வாக்களித்த நிலை மாறி, தற்போது தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஓட்டுக்கள் திசைமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகம் 8 கோட்டங்களின் கீழ் 22 மண்டலங்களாக செயல்படுகின்றன. இதில் 19,480 பேருந்துகள் தினமும் 88 லட்சம் கி.மீ. தூரம் இயக்கப்படுகின்றன. 1.69 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். 1.40 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ஓய்வூதியர்கள்.

இந்நிலையில் இவர்களுக்கான பணப் பலன்கள் ஓய்வுபெறும்போது கிடைப்பதில்லை. சம்பளத்தில் இருந்து பிஎப்., எல்ஐ.சி.க்கு பிடித்தம் செய்யும் பணமும் சம்பந்தப்பட்ட நிறுவ னங்களில் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்துவதில்லை. அந்த வகையில் தொழிலாளர்களின் கோடிக்கணக்கான ரூபாயை நிர்வாகம் செலவு செய்துவிட்டது.

இவற்றை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 2016, 2018-ம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் செய்தனர். குறிப்பாக 2011 முதல் 2019 வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்நிலையில் ஒரு ஷிப்டு பணி 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மிகைநேர ஊதியமும் கிடையாது. டயர் பஞ்சர், கண்ணாடி உடைதல், டீசலில் நிர்ணயித்த கி.மீ. இயக்கம் ஆகியவற்றுக்காக பல தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

இதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றாலும் அங்கு வழங்கும் தீர்ப்புகளையும் போக்குவரத்துக் கழகங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. தற்போது தேர்தல் நெருங்கியுள்ளதால் தொழிலாளர்கள் கூடி இது குறித்த விவரங்களைப் பகிர்ந்து வருகின்றனர். தங்கள் பிரச்சினைக்கு இத்தேர்தல் மூலம் தீர்வு காண எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது உள்ளிட்டவற்றை ஆலோசிக்கின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகப் பணியாளர் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் கூறியதாவது:தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண் டிய சலுகைகள் பல ஆண்டுகளாக கிடைக்கவில்லை. சிறிய தவறுகளுக்குக்கூட சர்வீஸ் பாதிக்கும் அளவு தண்டனை வழங்கப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்கும் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர். கட்டண உயர்வுக்கு ஏற்றவாறு வசூல்படியும் மாற்றி அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாகப் போராடி நொந்து போய் உள்ளனர். இத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என்றார்.

போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. இதன் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆட்சியிலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட் டங்களை மழுங்கடித்தது, கிடைத்த சலுகைகள் குறித்து உறுப் பினர்களிடையே பேசி வருகின்றனர். கடந்த கால பாதிப்புகள் தொழிலாளர்களிடம் கிளர்ந்தெழுவதால் கட்சிகள் கலக்க மடைந்துள்ளன. இதில் ஆளும் கட்சி சார்பு சங்கங்களும் இதே மனநிலையில் உள்ளன.

இது குறித்து சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தான்சார்ந்த கட்சிக்காகப் பல்வேறு சங்கங்களில் இருந்தாலும் அமல்படுத்தப்படும் திட்டங்களும், பாதிப்புகளும் அனை த்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

பிற துறைகளில் ஓய்வு பலன்கள் உடனே கிடைத்தாலும், போக்குவரத்துத் துறையில் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை. ரிசர்வ் தொழிலாளர்கள் இதுவரை நிரந்தப்ப டுத்தப் படவில்லை. அதனால்தான் வேலை நிறுத்தப் போராட்டங்களில்கூட ஆளும் கட்சி தொழிலாளர்களும் ஈடு பட்டனர். இந்த தேர்தலில் கட்சி சார்பு இல்லாமல் எங்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தியே நாங்கள் வாக்குகளை அளிப்போம் என்றனர்.

இருப்பினும் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்கள் இருப்பதால் இவர்களை அணுகி வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x