Published : 12 Mar 2019 07:07 PM
Last Updated : 12 Mar 2019 07:07 PM

காங்கிரஸ் தொகுதிகள் இழுபறி இன்று முடிவுக்கு வருகிறது: திருச்சி தொகுதி பிரச்சினை தீர்ந்ததாக தகவல்

காங்கிரஸ் நிற்கும் 9 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கான பிரச்சினையால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் காங்கிரஸின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தொகுதிப்பிரச்சினை கிட்டத்தட்ட தீர்ந்தது. இன்றிரவுக்குள் பிரச்சினை தீர்ந்துவிடும் என தெரிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இழுபறி நீடித்து வரும் நிலையில் நேற்று இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்ததாக கூறப்பட்டது.

தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என நேற்று தகவல் வெளியானது.

காங்கிரஸ் தரப்பிலும் மேலிடத்திற்கு அனுப்பி வைத்த லிஸ்ட் அனுமதி கிடைத்தவுடன் அண்ணா அறிவாலயம் செல்லலாம் என காத்திருந்தனர். ஆனால் நேற்று இரவுவரை எந்த தகவலும் இல்லாததால் இரவு 8-30 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

திமுக தரப்பில் திடீரென 2 தொகுதிகளை மீண்டும் கேட்பதால் மறுபடியும் பேச்சுவார்த்தை நீள்கிறது என காங்கிரஸ் தரப்பில் தெரிவித்தனர்.

காங்கிரஸுக்கு 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  ஆனால் நேர்காணலில் திமுக நிர்வாகிகள் திருச்சி தொகுதியில் திமுக நின்றே ஆகவேண்டும் என வற்புறுத்தியதாகவும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கே.என்.நேருவும் திமுக நிற்கவேண்டும் என வற்புறுத்த ஸ்டாலினும் அதற்கு பேசிப்பார்க்கிறேன் எனச் சொன்னதாக தகவல் வெளியானது.

அதேப்போன்று அரக்கோணம் தொகுதியிலும் திடீரென இழுபறி நீடிப்பதாகவும் இதற்குப்பதில் வேறு இரண்டுத் தொகுதிகளை தர திமுக பேசி வருவதாகவும், அதில் முடிவு வந்தப்பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நேற்று கூறப்பட்டது.

அனைத்து விஷயங்களையும் திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாக டெல்லித்தலைமையுடன் பேசுவதால் டெல்லித்தலைமை முடிவெடுத்து சொன்னவுடன் கையெழுத்திட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தயார் நிலையில் உள்ளனர் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் தற்போது இன்று இரவுக்குள் கூட்டணி பிரச்சினை முடிவுக்கு வரும் என்கிற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நாளை ராகுல் காந்தி சென்னை வர உள்ள நிலையிலும் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதாலும் அதற்குள் தொகுதி ஒதுக்கப்படும் என்கிற முனைப்பில் இருதரப்பும் உள்ளது. அவ்வாறு இறுதியானால் அனைத்து கட்சிகளின் தொகுதிகளும் நாளையே அறிவிக்கப்படலாம்.

இதனிடையே இன்று இரவுக்குள் டெல்லியிலிருந்து ஒப்புதல் வர உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. திமுக கேட்ட திருச்சி, அரக்கோணம் தொகுதிகளில் தங்கள் வேட்பாளரையே முடிவு செய்துவிட்டதால் மாற்ற இயலாது என காங்கிரஸ் தலைமை தனது இயலாமையை கூறி உள்ளதாக தெரிகிறது.

அதனடிப்படையில் தற்போது பழைய லிஸ்ட்டில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் திமுக தரப்பில் கோரப்பட்டதாகவும், அதை காங்கிரஸ் தலைமை ஏற்று முடிவு செய்து இறுதிப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தேனி தொகுதியை காங்கிரஸ் விட்டுகொடுப்பது என்றும் அதற்குப்பதில் சேலத்தில் காங்கிரஸ் நிற்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6. சேலம், 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10.புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே இன்று இரவுக்குள் அனைத்தும் இறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும் என  தெரிகிறது.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x